திருச்சி இடைத் தேர்தல் எதிரொலி- டாஸ்மாக் மதுக் கடைகள், பார்கள் இழுத்து மூடல்
திருச்சி: திருச்சி மேற்கு தொகுதி இடைத் தேர்தலையொட்டி திருச்சி மாவட்டத்தில் அனைத்து டாஸ்மாக் மதுக் கடைகள், பார்கள், ஹோட்டல் பார்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் குடிமக்கள் மது கிடைக்காமல் அவதிக்குள்ளாகியுள்ளனராம்.
திருச்சி மேற்கு சட்டசபை தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் வெற்றி பெற்று அமைச்சராக இருந்த மரியம்பிச்சை சாலை விபத்தில் மரணம் அடைந்ததால் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, இந்த தொகுதிக்கு இன்று 13ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இந்த தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளராக மு.பரஞ்சோதியும், தி.மு.க. வேட்பாளராக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவும் போட்டியிடுகின்றனர். மேலும், இந்திய ஜனநாயக கட்சி, மக்கள் சக்தி ஆகிய கட்சி வேட்பாளர்களுடன் சுயேட்சைகள் உள்பட மொத்தம் 16 பேர் களத்தில் உள்ளனர்.
அனைத்து வாக்குச் சாவடிகளும் பதற்றம் நிறைந்தவையாக கருதி எல்லா வாக்கு சாவடிகளிலும் லேப்-டாப் வெப்கேமராக்கள் பொருத்தப்பட்டு, வாக்குப் பதிவு நடைபெறுவதை மாநில தலைமை தேர்தல் அலுவலர் தனது அலுவலகத்தில் இருந்தவாறே நேரடியாக கண்காணித்து வருகின்றார். தேர்தல் பார்வையாளர்களாக ஆர்.எஸ்.பதக், நிவேதிதா பிஸ்வாஸ், பராசிவமூர்த்தி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் அமைதியாகவும், பிரச்சினைகள் இல்லாமல் நடைபெற இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படையின் ஒரு கம்பெனி மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் 5 கம்பெனியினர் திருச்சியில் முகாமிட்டுள்ளனர். உள்ளூர் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இடைத்தேர்தலை முன்னிட்டு, திருச்சி மாவட்டத்தில் அரசு டாஸ்மாக் மதுக்கடைகள், பார்கள், ஓட்டல் பார்கள் அனைத்தும் 11ம் தேதி முதல் இன்று 13ம் தேதி வரை 3 நாட்களுக்கு மூடப்படும் என மாவட்ட கலெக்டர் ஜெயஸ்ரீ முரளிதரன் அறிவித்துள்ளார். இதன்மூலம் தேர்தல் அமைதியாகவும், முறையாகவும் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
மதுக் கடைகள், பார்கள் மூடப்பட்டுள்ளதால் பல குடிகாரர்கள் சமயோஜிதமாக முன்கூட்டியே சரக்குகளை வாங்கி ஸ்டாக் வைத்துக் கொண்டனர். அப்படிச் செய்யாதவர்கள் மது கிடைக்காமல் அவதிப்படுகின்றனராம்.












Click it and Unblock the Notifications