ஊழலற்ற ஆட்சி அமைய வேண்டும்- டாக்டர் கிருஷ்ணசாமி பிரச்சாரம்
ஒட்டப்பிடாரம்: உள்ளாட்சித் தேர்தலில் ஊழலற்ற மக்கள் ஆட்சி அமைய வேண்டும் என்று புதிய தமிழகம் தலைவர் டாக்டர கிருஷ்ணசாமி கூறியுள்ளஆர்.
ஓட்டப்பிடாரம் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் புதிய தமிழகம் கட்சி சார்பில் 10வது வார்டில் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு வக்கீல் கனகராஜ், ஓன்பதாவது வார்டுக்கு கற்பககனி, 11வது வார்டுக்கு கருப்பசாமி ஆகியோரும், ஓன்றிய கவுன்சிலர் வேட்பாளராக மாரியம்மாள், முருகானந்தம், சுப்பிரமணியன், பாலமுருகன், பட்டவாரயன் ஆகியோரும், போட்டியிடுகின்றனர். இவர்களை ஆதரித்து டாக்டர் கிருஷ்ணசாமி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், உள்ளாட்சி தேர்தலில் மக்கள் ஊழலற்ற ஆட்சி அமைய வாக்களிக்க வேண்டும். ஓட்டப்பிடாரத்தில் தாலுகா அலுவலகத்திலும், யூனியன் அலுவலகத்திலும் ஊழலற்ற நிர்வாகத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளேன். பேரூந்து வசதிகள் அதிகப்படுத்தி தரப்பட்டுள்ளது. நில மோசடி முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளது. குடிநீர் பஞ்சம் தீர்த்து வைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து மக்களுக்காக இன்னும் சிறப்பாக தொண்டாற்றிட புதிய தமிழகம் கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள்.
மாவட்ட கவுன்சிலராக வெற்றி பெற்ற சிலர் ஊழல் செய்து பலகோடி சம்பாதித்துள்ளனர். எனவே அவர்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும். எனவே ஊழலற்ற ஆட்சி அமைய புதிய தமிழகம் வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.