திமுக வேட்பாளரை செருப்பால் அடித்த அதிமுக எம்.எல்.ஏ. சாமி- புகாரை பெற மறுத்த இன்ஸ்பெக்டர் மாற்றம்

மதுரை அருகே உள்ள மேலூர் நகராட்சியில் 19வது வார்டு உறுப்பினர் பதவிக்கு திமுக சார்பில் ராஜபாலன் என்பவர் போட்டியிடுகிறார். நேற்று இரவு ராஜபாலனும், திமுகவினரும் வாக்கு சேகரித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த எம்எல்ஏ சாமியின் உறவினர்கள் சிலர், ராஜபாலனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து சாமி விரைந்து வந்தார். வந்தவர் நேராக ராஜபாலனிடம் சென்று செருப்பைக் கழற்றி அடித்து விட்டார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து சாமியும் மற்றவர்களும் வேகமாக போய் விட்டனர். அடிபட்ட ராஜபாலன் மேலூர் காவல் நிலையம் வந்து இன்ஸ்பெக்டர் மாடசாமியிடம் புகார் கொடுத்தார். ஆனால் மாடசாமி புகாரை வாங்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து எஸ்.பி. அஸ்ரா கார்க்கை அணுகியது திமுக தரப்பு.
இந்த நிலையில், எம்.எல்.ஏ சாமி தரப்பில் மாடசாமியிடம் ஒரு புகார் தரப்பட்டது. அதில், தனது காரை நள்ளிரவில் யாரோ தீவைத்து எரித்து விட்டதாக சாமி சார்பில் அவரது டிரைவர் சிங்கராஜா என்பவர் புகாரில் கூறியிருந்தார். இதை உடனடியாக போலீஸார் பதிவு செய்தனர்.
இந்த நிலையில், புகார் கொடுத்ததை ஏற்க மறுத்ததற்காக இன்ஸ்பெக்டர் மாடசாமியை அதிரடியாக இடமாற்றம் செய்துஉத்தரவிட்டுள்ளார் எஸ்.பி.அஸ்ரா கார்க். இதனால் சாமி தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளது.
ஏன் இந்த மோதல்?
இதற்கிடையே இந்த மோதல் குறித்து மேலூர் வட்டாரத்தில் வேறு ஒரு காரணம் கூறப்படுகிறது. மேலூர் நகராட்சித் தலைவர் பதவிக்கு யாசின் என்பவர் திமுக சார்பில் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் சரவணன் போட்டியிடுகிறார். இவர் சாமியின் உறவினராம்.
யாசினுக்கு இஸ்லாமியர்களின் வாக்குகள் அப்படியே கிடைக்கும் என்பதால் அவர் வெற்றி பெறுவது உறுதி என்று திமுக தரப்பிலும், மேலூர் வட்டாரத்திலும் பேசப்படுகிறது. இதனால்தான் கோபத்தில் உள்ளார் சாமி. அந்த கோபத்தைத்தான் ராஜபாலன் மீது காட்டினார். மேலும் காரையும் கூட அவரது தரப்பிலேயே சிலர் எரித்ததாக பேசப்படுகிறது.
இந்த விவகாரத்தால் மேலூர் வட்டாரத்தில் பரபரப்பும், பதட்டமும் நிலவுகிறது.












Click it and Unblock the Notifications