அரசியலில் புதிய மாற்றத்தை தமிழக மக்கள் கொண்டு வருவார்கள்-விஜயகாந்த்
சென்னை: அரசியலில், உள்ளாட்சித் தேர்தலில் தமிழ்நாடு மக்கள் புதிய மாற்றத்தைக் கொண்டு வருவார்கள் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கை:
உள்ளாட்சி மன்றத் தேர்தலில் ஒவ்வொரு அரசியல் கட்சியும் தனித்தனியே போட்டியிடுகின்றது. தே.மு.தி.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்து கூட்டாக இந்தத் தேர்தல்களில் போட்டியிடுகிறது. கடந்த 20 நாட்களுக்கும் மேலாக தமிழ்நாடு முழுவதும் சுற்றி பிரசாரம் செய்துள்ளேன். ஏராளமான பொது மக்கள் ஆங்காங்கே கலந்து கொண்டு தங்கள் பேராதரவை தெரிவித்துள்ளனர். அரசியலில் உள்ளாட்சித் தேர்தல் ஒரு புதிய மாற்றத்தை தமிழ்நாட்டு மக்கள் கொண்டு வருவார்கள் என்கிற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில் ஏற்கனவே உள்ளாட்சி மன்றங்களில் பொறுப்பு வகித்து, ஆதிக்கம் செலுத்திய அரசியல் கட்சிகள், தங்களை எல்லா வகையிலும் பலப்படுத்திக் கொண்டு உள்ளது மட்டுமல்ல, இந்தத் தேர்தல்களிலும் தாங்களே பதவிகளை கைப்பற்ற முனைந்துள்ளனர். சாம, பேத, தான, தண்டம் என்கின்ற நான்கு வகை உபாயங்களையும் கையாண்டு வருகின்றனர்.
பல இடங்களில் வாக்காளார்கள் பட்டியல் சரிவர இல்லை. சில இடங்களில் வேட்பாளர்கள் மிரட்டப்படுகிறார்கள். வாக்காளர்களுக்கு வழங்கப்படும் பூத் ஸ்லிப்புகள் கட்சி சின்னம் பொறிக்கப்பட்டு இருக்கக் கூடாது என்று விதி இருந்தும், ஆளும் கட்சியினர் இந்த விதியினை மீறி கட்சி சின்னம் பொறிக்கப்பட்ட பூத் ஸ்லிப்புகளை வழங்கி வருகிறார்கள்.
அதே போல தேர்தல் ஆணையரால் எதிர்க்கட்சிகளுக்கு கொடுக்கப்பட்ட வாக்காளர் பட்டியல் அடங்கிய சி.டியை விட, ஆளும் கட்சியினருக்கு தரப்பட்டு இருக்கிற சி.டி. சுமார் 400 வாக்காளர்களை கூடுதலாக பெற்றிருக்கிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சென்னை பெருநகரத்தில் இருந்து தமிழகத்தின் சிற்றூர்கள் வரை இத்தேர்தல்கள் நடைபெற உள்ளன. இந்த தேர்தல்கள் சென்ற முறைபோல அமையாமல் நேர்மையாகவும், முறையாகவும் நடத்தப்பட வேண்டுமென்று மக்கள் விரும்புகிறார்கள்.
வாக்கு போட விடாமல் தடுப்பதும், வாக்குச் சாவடிகளில் கலாட்டா செய்வதும், வாக்குகள் எண்ணிக்கையின்போது கலவரத்தில் ஈடுபடுவதும், தோற்ற வேட்பாளர்களை வெற்றி பெற்றவர்களாக அறிவிப்பதும் போன்ற ஜனநாயக விரோத நடவடிக்கைகள் கடந்த கால வரலாறாக மட்டுமே இருக்க வேண்டும் என்றும், பணபலம், அதிகாரபலம், படைபலம் போன்ற தீய சக்திகள் இந்த உள்ளாட்சி மன்றத் தேர்தலை சீர்குலைக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
நம்முடைய இயக்கத்தைச் சேர்ந்த தோழர்களும், கூட்டணிக் கட்சியினரும் இன்று முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடியும் நாள் வரை இரவு, பகல் பாராமல் விழிப்போடு இருந்து பணியாற்ற வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications