பெங்களூர் மெட்ரோ ரயில் போக்குவரத்து அக்டோபர் 20ம் தேதி தொடக்கம்

மிக நீண்ட காலமாகவே இந்த மெட்ரோ ரயிலுக்காக காத்துக் கிடக்கிறது பெங்களூர் மாநகரம். இந்த காத்திருப்பு தற்போது முடிவுக்கு வருகிறது.
இந்தியாவின் சிலிக்கன் சிட்டி எனப்படும், தகவல் தொழில்நுட்ப தலைநகரான பெங்களூரின் முகத்தை இந்த மெட்ரோ ரயில் மாற்றியமைக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏகமாக உள்ளது.
தொடக்க நாளான அக்டோபர் 20ம் தேதி வியாழக்கிழமையன்று மாலை 4 மணிக்கு முதல் மெட்ரோ ரயில் ஓடத் தொடங்கும். அடுத்த நாளான வெள்ளிக்கிழமை முதல் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மெட்ரோ ரயில் செயல்படும்.
முதல் ரயிலை மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் கமல்நாத் தொடங்கி வைக்கிறார். காலை 10.30 மணிக்கு எம்.ஜி. ரோட்டில் நடைபெறும் தொடக்க விழாவில், எம்.ஜி. ரோடு முதல் பையப்பனஹள்ளி இடையிலான சேவையை அவர் ஆரம்பித்து வைப்பார். அதன் பின்னர் முறைப்படியான மெட்ரோ ரயில் தொடக்க விழா பீல்ட்மார்ஷல் மானேக்ஷா பரேட் மைதானத்தில் நடைபெறுகிறது.
எம்.ஜி.ரோடு நிலையத்திலிருந்து பையப்பனஹள்ளி வரையிலான ரயில் சேவை மாலை 4 மணிக்கு தொடங்கும். அந்த ரயில் டிரினிட்டி சர்க்கிள், அல்சூர், இந்திரா நகர், சுவாமி விவேகானந்தா சாலை நிலையங்களில் நின்று செல்லும். ஒவ்வொரு நிலையத்திலும் 30 விநாடிகள் நிற்கும். 10 நிமிடத்திற்கு ஒரு ரயில் இயக்கப்படும்.
வெள்ளிக்கிழமை முதல் மெட்ரோ ரயில் சேவை முழுமையாக செயல்படும். காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை இந்த ரயில்கள் இயக்கப்படும்.
பெங்களூரில் தொடங்கப்படும் மெட்ரோ ரயில், தென்னிந்தியாவின் முதல் மெட்ரோ ரயில் சேவை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications