மன்மோகன் ரொம்ப வீக்- எதியூரப்பாவால் செய்தியாளர்களைச் சந்திக்க அஞ்சி ஓடும் அத்வானி பேச்சு!

ஊழலுக்கு எதிராக ரத யாத்திரை மேற்கொண்டுள்ளார் அத்வானி. தற்போது மத்தியப் பிரதேசத்தில் அவர் வலம் வந்து கொண்டுள்ளார். இவர் யாத்திரை தொடங்கிய நேரமோ என்னவோ, ஊழல் புகார் காரணமாக கர்நாடக முன்னாள் முதல்வர் எதியூரப்பா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனால் சங்கடப்பட்டுப் போன அத்வானி, மத்தியப் பிரதேசத்திற்கு வந்தது முதல் பத்திரிக்கையாளர்களை சந்திக்காமலேயே இருக்கிறார். 2 முறை ஏற்பாடு செய்யப்பட்ட பத்திரிக்கையாளர் சந்திப்புகளையும் கூட அவர் ரத்து செய்து விட்டார்.
இந்த நிலையில், நாக்பூரில் நடந்த யாத்திரையின்போது அவர் ஒரு பொதுக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசினார். அப்போது அவர் கூறுகையில், பிரதமர் மன்மோகன் சிங்கை பிற பிரதமர்களுடன் ஒப்பிடுகையில் குறைந்த எம்.பி.க்கள் ஆதரவுடன் ஆட்சி நடத்திய ஐ.கே. குஜ்ரால், சந்திரசேகர், தேவ கெளடா ஆகியோர் சிறப்பாகச் செயல்பட்டனர்.
ஆனால் அவர்களை விட அதிக எம்.பிக்களைக் கொண்ட மன்மோகன் சிங், 10, ஜன்பத் சாலை என்ற முகவரியிலிருந்து (சோனியா காந்தியின் வீடு) ஒப்புதல் கிடைக்காமல் எவ்வித நடவடிக்கையையும் மேற்கொள்வதில்லை.
காங்கிரஸ் தலைமையிலான அரசு மோசமான நிலையில் உள்ளது. மன்மோகன் சிங் மீது நான் மரியாதை வைத்துள்ள போதிலும், அவரது நிலைக்காகப் பரிதாபப்படுகிறேன்.
2009 மக்களவைத் தேர்தலின்போது, மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்றால் 100 நாள்களில் வெளிநாடுகளில் உள்ள கறுப்புப் பணத்தை இந்தியாவுக்கு கொண்டு வருவோம் என காங்கிரஸ் வாக்குறுதி அளித்தது. ஆனால், ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையிலும், அதற்கான நடவடிக்கைகளை எடுக்கவில்லை. கறுப்புப் பணம் மீட்கப்பட்டிருந்தால், இந்தியாவில் உள்ள 6 லட்சம் கிராமங்களில் குடிநீர், மின்சாரம், சாலை வசதிகளை ஏற்படுத்தித் தர முடியும்.
தகவல்பெறும் உரிமைச் சட்டத்தால் அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மை ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் அமைச்சர்களுக்கு இடையே உள்ள கருத்து வேறுபாடு (2ஜி அலைக்கற்றை விவகாரத்தில்) தகவல்பெறும் உரிமைச் சட்டத்தால் வெளிப்பட்டதை அடுத்தே, அந்தச் சட்டத்தை மறுபரிசீலனை செய்யப்போவதாக காங்கிரஸ் அரசு தெரிவித்து வருகிறது.
கடந்த 21 ஆண்டுகளில் 6-வது முறையாக ரத யாத்திரையை மேற்கொண்டுள்ளேன். ரத யாத்திரை செல்வது குறித்து முடிவு செய்தபோது, எனக்கு நெருக்கமான சிலர் ஆட்சேபணை தெரிவித்தனர். தொலைக்காட்சி, இன்டர்நெட் போன்ற நவீன தொழில்நுட்ப வசதிகள் வந்தபின், எதற்காக ரத யாத்திரை என்றனர்.
நாட்டில் மின்சார வசதியில்லாமல் கிராம மக்கள் பலர் உள்ளனர். அவர்களிடம் எனது கருத்தைக் கொண்டு செல்ல ரத யாத்திரையே சரியான வழி என பதிலளித்தேன். அதன்படி, ஊழலுக்கு எதிரான எனது ரத யாத்திரைக்கு மக்களிடையே மிகுந்த வரவேற்பு உள்ளது என்றார்.
ஹரியா, ஆந்திரா மற்றும் மகாராஷ்டிராவில் நடந்த இடைத் தேர்தல் முடிவுகள் குறித்து அத்வானி கூறுகையில், இங்கு நடந்த மூன்று தொகுதி இடைத் தேர்தலிலும் காங்கிரஸ் படு தோல்வியைச் சந்தித்துள்ளது. 2வது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஆட்டம் காண ஆரம்பித்துள்ளதையே இது காட்டுகிறது. இது மக்கள் அரசுக்கு விடுத்துள்ள எச்சரிக்கையாகும் என்றார் அவர்.
தனது பேச்சின்போது எதியூரப்பா கைது குறித்தோ, கர்நாடக பாஜக மீதான ஊழல், முறைகேடுகள் குறித்தோ ஒரு வார்த்தை கூட அத்வானி பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications