'சொத்து குவிப்பு வழக்கு-கவனத்தை திசை திருப்ப காவிரி விவகாரத்தை கையில் எடுக்கும் ஜெ': கருணாநிதி

அவர் அளித்த பேட்டி:
கேள்வி: தமிழ்நாட்டில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல்களில் ஆளுங்கட்சியைத் தவிர அனைத்து எதிர்க்கட்சிகளும், இந்தத் தேர்தல் ஒழுங்காக, முறையாக நடக்கவில்லை என்று சொல்லியிருக்கிறார்கள். எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் இந்தத் தேர்தலே ஒரு 'ஹம்பக்'என்று சொல்லியிருக்கிறார். எனவே இந்தத் தேர்தலைப் பற்றி அனைத்து எதிர்க்கட்சிகளும் சேர்ந்து ஏதாவது செய்யப் போகிறீர்களா?
பதில்: எங்களைப் பொறுத்தவரையில் நாங்கள் நீதிமன்றத்திற்குச் செல்வதற்கு முன்பு தேர்தல் ஆணையரைச் சந்தித்து, பல்வேறு முறையீடுகளைச் செய்திருக்கிறோம். என்னென்ன தவறுகள் நடைபெற்றிருக்கின்றன என்பதை சான்றுகளோடு எடுத்துக்காட்டியிருக்கிறோம். இதற்கும் மேலாக நீதிமன்றத்திற்குச் செல்லவும் இருக்கிறோம்.
கேள்வி: கூடங்குளம் பிரச்சனையில் மத்திய அரசு தான் தலையிட வேண்டுமே தவிர, மாநில அரசு ஒன்றும் செய்ய முடியாது என்று ஜெயலலிதா பிரதமருக்கு கடிதம் எழுதியிருக்கிறார்களே?
பதில்: கடிதம் எழுதினால் போதுமா? என்று நான் ஆட்சியிலே இருந்த போது கேட்டவர்கள் இப்போது பிரதமருக்கு கடிதம் எழுதிக் கொண்டிருக்கிறார்கள்; பாவம்!.
கேள்வி: அவர்கள் என்ன எழுதியிருக்கிறார்கள் என்றால், மத்திய அரசு வேண்டுமென்றே மாநில அரசு மீது குற்றஞ்சாட்டுவதற்காக, கூடங்குளம் பிரச்சனையை தீர்க்காமல் இருக்கிறார்கள் என்று சொல்கிறார்களே?
பதில்: அதில் உண்மை என்ன என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டியது பத்திரிகையாளர்களுடைய கடமை. மாநில அரசைப் பொறுத்த வரையில் பாம்புக்கு வாலும், மீனுக்குத் தலையும் காட்டுகின்ற ஜால வித்தையைச் செய்து கொண்டிருக்கிறார்கள்.
கேள்வி: மாநில தேர்தல் ஆணையம் இன்றைய தினம் ஒரு ஆலோசனைக் கூட்டத்தை நடத்துவதாகச் சொல்லியிருக்கிறார்கள். பொது மக்களிடமிருந்து எந்தப் புகாரும் வரவில்லை என்று சொல்லியிருக்கிறார்கள். ஆனால் தொலைக்காட்சிகளில் எல்லாம் பல்வேறு ஆதாரங்களோடு வெளியிடப்பட்டிருக்கிறது. பல இடங்களில் வெட்டு குத்துகள் நடந்திருக்கின்றன. மண்டைகள் உடைக்கப்பட்டிருக்கின்றன. ஆனாலும் புகார் வரவில்லை என்கிறார்கள். எனவே இன்று நடத்தும் ஆலோசனைக் கூட்டத்தை நியாயமாக நடத்துவார்களா? அந்த ஆலோசனையில் நல்ல தீர்வு கிடைக்குமா?
பதில்: இந்த அரசாங்கத்திடம் நேர்மையான தீர்வுகளை எதிர்பார்க்க முடியாது. அதைப் போல தேர்தல் ஆணைய அய்யரிடமும் எதிர்பார்க்க முடியாது.
கேள்வி: கூடங்குளம் பிரச்சனையில் தி.மு.கழகத்தின் நிலை என்ன?
பதில்: அணு அளவும் மக்களுக்கு எந்தவிதமான ஆபத்தும் உயிர்ச் சேதமும் வராத நிலையில் அவ்வளவு பாதுகாப்பாக அந்த அணு உலையை அமைப்பதற்கான வழிவகைகளை மத்திய, மாநில அரசுகள் ஆய்வு செய்து அதன்பிறகு மேற்கொள்ள வேண்டும் என்பதே எமது நிலை.
கேள்வி: காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை மத்திய அரசின் கெஜட்டில் வெளியிட வேண்டுமென்று இப்போது திடீரென்று சொல்லியிருக்கிறார்களே?
பதில்: காவிரிப் பிரச்சனையை இப்போது திடீரென்று கிளப்பியிருப்பதற்குக் காரணமே, இவர்களுடைய வழக்கிலிருந்து தப்புவதற்கு, இதைக் காரணம் காட்டி மற்றொரு வாய்தா வாங்க முடியுமா என்பதற்காகத்தான்.
கேள்வி: கூடங்குளம் தொடர்பாக பிரதமருக்கு நீங்கள் ஏதாவது ஆலோசனை சொல்கிறீர்களா?
பதில்: கேட்டால் சொல்வேன்.












Click it and Unblock the Notifications