மணல் கொள்ளை வழக்கில் சிக்கி கைதான திமுக எம்.எல்.ஏ கே.சி.பழனிச்சாமிக்கு ஜாமீன்
கரூர்: மணல் கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட அரவக்குறிச்சி திமுக எம்.எல்.ஏ. கே.சி.பழனிசாமிக்கு ஜாமீன் கிடைத்துள்ளது. இதையடுத்து அவர் இன்று விடுதலையாகிறார். இருப்பினும் அவர் விடுதலையானதும் வேறு வழக்கு ஏதேனும் பாயுமா என்ற பதைபதைப்பில் அவரது ஆதரவாளர்கள் உள்ளனர்.
கரூர் மாவட்டம் மாயனூர் காவிரியாற்றுப் பகுதியில் அரசு புறம் போக்கு நிலத்தில் அனுமதி இன்றி மணல் அள்ளி கோடிக்கணக்கில் சம்பாதித்ததாக அரவக்குறிச்சி தி.மு.க. எம்.எல்.ஏ. கே.சி.பழனிசாமி, அவரது உதவியாளர் சுந்தரேசன், மோலாளர் கிரிராஜ், மற்றும் ரவிராஜா, ராஜா, சசிகுமார், குமார் ஆகிய ஏழு பேர் மீது மாயனூர் கிராம நிர்வாக அலுவலர் (பொறுப்பு) நீலமேகம் கொடுத்த புகாரின் பேரில் மாயனுர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
அதன் பேரில் திமுக அரவக்குறிச்சி எம்.எல்.ஏ. கே.சி.பழனிசாமியை கடந்த மாதம் 19 ம் தேதி போலீசார் கைது செய்து, குளித்தலை கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
மேலும், கரூரை அடுத்த நெரூர் பகுதியில் ராமசாமி அய்யர், முத்தையா ஆகியோருக்கு சொந்தமான இடத்தில் கடந்தாண்டு டிசம்பர் மாதம், 15 ம் தேதி, அரசு அனுமதி பெறாமல் மணல் அள்ளியதாக தி.மு.க. எம்.எல்.ஏ. கே.சி. பழனிசாமி, அவரது உதவியாளர் சுந்தரேசன், மற்றும் கிரிராஜன் உள்பட சிலர் மீது வாங்கல் காவல் நிலையத்தில் கடந்த 30 ம் தேதி கிராம நிர்வாக அதிகாரி தங்கராஜ் புகார் அளித்தார். அதன் பேரில் தி.மு.க. எம்.எல்.ஏ. கே.சி. பழனிசாமி மீது வாங்கல் போலீசார் மீண்டும் ஒரு வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த நிலையில், தனக்கு ஜாமீன் கோரி கே.சி.பழனிசாமி கரூர் மாவட்ட அமர்வு நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதன் பேரில் கே.சி. பழனிசாமிக்கு நீதி மன்றம் இன்று காலை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
ஏற்னவே, மாயனூர் வழக்கு தெடார்பாக சென்னை உயர் நீதி மன்ற மதுரை கிளையில் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளதால், இன்று மாலை அவர் திருச்சி மத்திய சிறையில் இருந்து விடுதலை செய்யப்படுகின்றார்.
கடந்த சில தினங்ளுக்கு முன்பு கே.சி. பழனிசாமி கைது செய்யப்பட்டதில் இருந்து மாவட்டத்தில் உள்ள பல முக்கிய நிர்வாகிகள் கடும் சோர்வில் இருந்தனர். இந்த நிலையில், கே.சி. பழனிசாமி விடுதலை செய்யப்படுவதால் திமுகவினர் உற்சாகத்தில் உள்ளனர்.
இருப்பினும் வீரபாண்டி ஆறுமுகம், கே.என். நேருவை விடுதலையானதும் கைது செய்ததைப் போல வேறு ஏதேனும் ஒரு வழக்கைப் போட்டு கேசிபியையும் கைது செய்வார்களா என்ற அச்சமும் நிலவுகிறது.












Click it and Unblock the Notifications