இந்தியப் பொருளாதாரத்துக்கு கஷ்ட காலம் காத்திருக்கிறது! - பிரணாப் 'ஓபன் ஸ்டேட்மெண்ட்'!

டெல்லியில் பொருளாதார பத்திரிகை ஆசிரியர்கள் ஆண்டு கூட்டத்தில் நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி பேசினார்.
அவர் கூறுகையில், "உலகளாவிய பொருளாதார மந்தம் காரணாமாக இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்பட்டு வருகின்றது என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். உலக நிதி நெருக்கடியால் இந்த ஆண்டு இந்தியாவின் வளர்ச்சி 8 சதவீதம் கீழே சென்றுள்ளது.
பணவீக்கம் டிசம்பர் மாதத்திலிருந்து குறையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வரும் மார்ச் இறுதியில் 7 சதவீதமாக இருக்கும்.
கடந்த ஏப்ரல்-ஆகஸ்ட் மாதங்களில் வெளிநாட்டு நேரடி முதலீடு $ 16.8 பில்லியன் இரட்டிப்பானது. ஆனால் கடந்த சில மாதங்களாக இந்திய பொருளாதார வளர்ச்சி ஏமாற்றம் அளிக்கும் வகையில் உள்ளது. 2011-12 இல் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் பிப்ரவரி மாத அளவை விட குறைவாகத்தான் இருக்கும்.
இந்த வளர்ச்சி 8 சதவீதத்துக்கும் குறைவாகவே இருக்கும் என்றாலும் சர்வதேச நிலைமையைக் கருத்தில் கொண்டு அதை எதிர்நோக்க வேண்டும்.
பருவநிலை நன்றாக உள்ளது. தென்மேற்கு பருவக் காற்றால் நல்ல மழைப் பொழிவு கிடைத்துள்ளது. எனவே வேளாண் துறையில் உணவு உற்பத்தி இந்த ஆண்டு முன்னேற்றம் இருக்கும். கடந்த ஆண்டு 120 மில்லியன் டன்னாக இருந்தது இந்த ஆண்டு 123 மில்லியனுக்கும் அதிகமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
தொழில் துறை வளர்ச்சியும் குறைந்துள்ளது. கடந்த காலாண்டில் 5.6 சதவீத வளர்ச்சிதான் எட்டப்பட்டது. ஆனால் அதற்கு முந்தைய ஆண்டு இதே காலகட்டத்தில் 8.7 சதவீத வளர்ச்சி இருந்தது. இந்த வீழ்ச்சிக்கு காரணம், உற்பத்தித் துறை சரிவுக்குள்ளானதுதான்.
நிதித்துறையில் நிறைய ஏற்றத்தாழ்வுகள் வர வாய்ப்பிருக்கிறது. காரணம் மேற்கு நாடுகளில் நிலைமை சரியில்லை. இந்திய நிதிச் சந்தையில் பெரிய அளவிலான கரெக்ஷன் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
கறுப்புப் பணத்தை ஒழிப்பதில் அரசின் நடவடிக்கைகள் இதுவரை இல்லாத அளவுக்கு துரிதப்படுத்தப்பட்டுள்ளன. ஏராளமான தகவல்களை வெளிநாட்டு வங்கிகளிடமிருந்து பெற்றுள்ளோம். விரைவில் கறுப்புப் பணத்தை அரசு மீட்டுவிடும்," என்றார்.












Click it and Unblock the Notifications