உ.பியில் அன்னா குழுவை தாக்கும் முயற்சி முறியடிப்பு: 4 பேர் கைது
மீரட்: உத்தர பிரதேச மாநிலம் மீரட்டில் அன்னா குழுவினரை தாக்கும் முயற்சியை போலீசார் முறியடித்துள்ளனர். இது தொடர்பாக அகந்த் இந்துஸ்தான் மோர்ச்சா தலைவர் சத்திதானந்த் சரஸ்வதி உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
உத்தர பிரதேச மாநிலம், மீரட்டில் உள்ள ஜிம்கானா மைதானத்தில் இன்று அன்னா குழுவினரின் கூட்டம் நடக்கவிருந்தது. அந்த கூட்டத்தில் வைத்து அன்னா குழுவினரைத் தாக்க சிலர் திட்டமிட்டு ஜிம்கானா மைதானத்திற்கு சென்றனர். ஆனால் அன்னா குழுவினர் வருவதற்கு முன்பாகவே இதை கண்டுபிடித்த போலீசார் அகந்த் இந்துஸ்தான் மோர்ச்சா தலைவர் சத்திதானந்த் சரஸ்வதி உள்பட 4 பேரை கைது செய்தனர். இதன் மூலம் அன்னா குழுவை தாக்கும் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.
இதே இந்துஸ்தான் மோர்ச்சா அமைப்பு தான் பகத் சிங் கிராந்தி சேனா ஆட்களுடன் சேர்ந்து கடந்த 13ம் தேதி டெல்லி நீதிமன்றத்திற்கு வெளியே வைத்து அன்னா ஆதரவாளர்களை தாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக அன்னா குழு உறுப்பினரும், மூத்த வழக்கறிஞருமான பிரசாந்த் பூஷன் தாக்கப்பட்டார்.
கடந்த 18ம் தேதி உத்தர பிரதேச தலைநகர் லக்னோவில் நடந்த கூட்டத்தில் வைத்து அன்னா குழுவின் முக்கிய உறுப்பினரான அர்விந்த் கேஜ்ரிவால் மீது ஜிதேந்தர் பதக் என்பவர் ஷூவை வீசினார், அவரைத் தாக்கவும் முயன்றார். ஊழல் விவகாரத்தில் கேஜ்ரிவால் மக்களை தவறான பாதையில் அழைத்துச் செல்வதால் தான் அவர் மீது ஷூ வீசியதாக பதக் தெரிவி்த்தார்.
இந்நிலையில் இன்று அன்னா குழுவினரைத் தாக்கும் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications