பாளை அருகே தேர்தல் தகராறில் பயங்கர மோதல்: மக்கள் சாலை மறியல்
பாளையங்கோட்டை: பாளை அருகே தேர்தல் தகராறில் இருதரப்பினருக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
பாளை அருகே உள்ள ரெட்டியார்பட்டி பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு பண்டாரத்தி, அருணா ஆகியோர் போட்டியிட்டனர். தேர்தல் தொடர்பாக இரு தரப்பினருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த 17ம் தேதி வாக்குப்பதிவின்போது இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. நேற்று முன்தினம் அப்பகுதியைச் சேர்ந்த சாரங்கபாணி என்பவர் மீது எதிர் தரப்பினர் வாகனத்தை மோதவிட்டு காயப்படுத்தினர்.
இந்த நிலையில் நேற்று காலை ரெட்டியார்பட்டியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ராஜ் என்பவர் பள்ளி மாணவர்களை ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு வந்தார். அப்போது ஒரு கும்பல் அவரது ஆட்டோவை வழிமறித்து ராஜை சரமாரியாக அடித்து உதைத்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றது. இதனால் அப்பகுதியில் பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது.
கடைகள் மீது கற்கள் வீசப்பட்டதால் அங்குள்ள கடைகள் அனைத்தும மூடப்பட்டன. இதனிடையே சாரங்கபாணி, ராஜ் ஆகியோரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அப்பகுதி மக்கள் சுமார் 500 பேர் ரெட்டியார்பட்டி சாலையில் நேற்று காலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்ததும் நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் வரதராஜ் உத்தரவின்பேரில் துணை கமிஷனர் லியோ, இன்ஸ்பெக்டர் முருகன் ஆகியோர் தலைமையில் அதிரடிப்படை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களை அங்கிருந்து கலைந்து போகச் செய்தனர். அப்போது பொதுமக்கள் சாரங்கபாணி, ராஜ் ஆகியோர் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வேண்டும் என போலீசாரிடம் கோரிக்கை வைத்தனர். நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதியளித்ததையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.












Click it and Unblock the Notifications