பெங்களூர் கோர்ட்டில் 2வது நாள் விசாரணை முடிந்தது-நவ. 8ல் மீண்டும் ஆஜராக ஜெ.வுக்கு உத்தரவு

Subscribe to Oneindia Tamil

Jayalalitha
பெங்களூர்: பெங்களூர் தனிக் கோர்ட்டில் முதல்முறையாக நேற்று ஆஜராகி 379 கேள்விகளுக்கு 6 மணி நேரம் பதிலளித்த முதல்வர் ஜெயலலிதா இன்று 2வது நாளாக நீதிமன்றத்தில் ஆஜராகி மற்ற கேள்விகளுக்கு பதில் தந்தார். நேற்றும் இன்றும் மொத்தமாக 567 கேள்விகளுக்குப் பதிலளித்துள்ளார் ஜெயலலிதா. இதையடுத்து நவம்பர் 8ம் தேதி மீண்டும் ஆஜராகுமாறு ஜெயலலிதாவுக்கு தனிகோர்ட் உத்தரவிட்டுள்ளது. அன்று மீதமுள்ள 772 கேள்விகள் கேட்கப்படவுள்ளன.

நேற்றைய விசாரணைக்குப் பின்னர் தனி வி்மானம் மூலம் சசிகலா, இளவரசியுடன் சென்னை திரும்பி விட்ட ஜெயலலிதா, இன்று மீண்டும் தனி விமானம் மூலம் பெங்களூர் வந்தார். அவருடன் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரும் வந்தனர். ஜெயலலிதாவுடன் சசிகலா, இளவரசி ஒரே காரில் வர, முன்னாள் வளர்ப்பு மகனான சுதாகரன் தனியாக வந்தார். இவர்கள் மீதும் இந்த நீதிமன்றத்தில் சொத்துக் குவிப்பு வழக்கு நடப்பது குறிப்பிடத்தக்கது.

ஜெயலலிதாவுடன் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் பெங்களூர் வந்தார்.

நேற்று போலவே எச்ஏஎல் விமான நிலையத்தில் வந்திறங்கியது ஜெயலலிதாவின் விமானம். அங்கிருந்து 25 கார்கள் அணிவகுக்க 11 மணிக்கு ஜெயலலிதா நீதிமன்றம் வந்து சேர்ந்தார். அங்கு அவரிடம் நீதிபதி மல்லிகார்ஜூனய்யா மற்றும் அரசு சிறப்பு வழக்கறிஞர் ஆச்சார்யா ஆகியோர் மிச்சமுள்ள கேள்விகளைக் கேட்டு பதில்களை பதிவு செய்தனர்.

இந்த விசாரணை 3.30 மணிக்கு முடிவடைந்தது. கிட்டத்தட்ட 4.30 மணி நேரம் அவரிடம் விசாரணை நடந்தது. இன்றைய விசாரணையின்போதும் அவரிடம் 188 கேள்விகள் கேட்கப்பட்டன.

இதையடுத்து நவம்பர் 8ம் தேதி மீண்டும் ஜெயலலிதா உள்ளிட்டோர் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி மல்லிகார்ஜூனய்யா உத்தரவிட்டார். ஜெயலலிதாவிடம் மொத்தம் 1339 கேள்விகளைக் கேட்க நீதிபதி மல்லிகார்ஜூனய்யா திட்டமிட்டுள்ளார். தற்போது கேட்கப்பட்டுள்ள 567 கேள்விகளைத் தவிர்த்து மீதமுள்ள 772 கேள்விகளையும் கேட்க வசதியாகவே நவம்பர் 8ம்தேதியன்று மீண்டும் ஆஜராக அவர் ஜெயலலிதாவுக்கு உத்தரவிட்டுள்ளார்.

கைது வாரண்ட் பிறப்பிக்க வாய்ப்பு

ஒருவேளை ஜெயலலிதா நவம்பர் 8ம் தேதி வராவிட்டால் என்ன நடக்கும் என்று அரசு சிறப்பு வக்கீல் ஆச்சார்யாவிடம் கேட்டபோது கைது வாரண்ட் பிறப்பிக்கப்படலாம் என்று அதிரடியாக பதிலளித்தார்.

நேற்று அதிமுகவினர் ஏராளமான அளவில் நீதிமன்ற வளாகத்தின் வெளியே திரண்டிருந்தனர். ஆனால், இன்று அவ்வளவு கூட்டத்தைப் பார்க்க முடியவில்லை. ஆனால், நேற்றைப் போலேவே இன்றும் ஜெயலலிதா வந்த பாதையிலும் நீதிமன்ற வளாகத்திலும் மிக பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

14 வருடங்களாக பெங்களூர் கோர்ட்டில் நிலுவையில் இருந்து வரும் சொத்துக் குவிப்பு வழக்கில் இதுவரை ஒருமுறை கூட ஜெயலலிதா ஆஜராகவில்லை. நேற்றுதான் அவர் முதல் முறையாக ஆஜரானார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெயலலிதாவிடம் கேள்விகள் கேட்டு முடித்த பின்னர் அவரது தோழி சசிகலா மற்றும் சசியின் உறவினர் இளவரசி, சுதாகரன் ஆகியோரிடம் நீதிமன்றம் விசாரணை நடத்தி கேள்விகளைக் கேட்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+