ராமலிங்க ராஜூ ஜாமீன் மனு - சிபிஐ கருத்தைக் கேட்கும் சுப்ரீம் கோர்ட்
டெல்லி: சத்யம் நிறுவனர் ராமலிங்க ராஜூவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது. ஆனால் அவர் மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள ஒப்புக் கொண்டது.
சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவன அதிபர் ராமலிங்க ராஜூ, அவருடைய தம்பி ராம ராஜு, தலைமை நிதி அதிகாரி ஸ்ரீனிவாஸ் மற்றும் சத்யம் கம்ப்யூட்டர் அதிகாரிகள் 5 பேர் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டனர். பங்குச் சந்தையில் ரூ 14 ஆயிரம் கோடி அளவுக்கு முறைகேடு செய்ததாக அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜாமீன் கேட்டு ராமலிங்க ராஜூ தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்த நிலையில், அதிகாரிகள் 5 பேருக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. எனவே, உடல் நிலை காரணங்காட்டியும் 5 பேருக்கு ஜாமீன் வழங்கியதை சுட்டிக் காட்டியும் ராமலிங்க ராஜூ உள்ளிட்ட 3 பேரும் மீண்டும் மனு தாக்கல் செய்தனர். அந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் தல்வீர் பண்டாரி, தீபக் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்ற பெஞ்சு முன்பு நேற்று நடந்தது.
அப்போது, இடைக்கால ஜாமீன் அளிக்குமாறு ராமலிங்க ராஜூ தரப்பில் கோரப்பட்டது. அதை உச்சநீதிமன்றம் ஏற்க மறுத்தது.
எனினும், ஜாமீன் மனு மீதான விசாரணையை விரைவில் நடத்த ஒப்புக் கொண்டது. அதன்படி, நவம்பர் 3-ந் தேதி அன்று விசாரணை நடைபெறும். மேலும், ஜாமீன் மனு மீது பதிலளிக்குமாறு சி.பி.ஐ.க்கும் உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.












Click it and Unblock the Notifications