வேலூர் மாநகராட்சியில்6 சுயேச்சை கவுன்சிலர்களை அதிமுகவுக்கு இழுத்தார் அமைச்சர் விஜய்
வேலூர்: வேலூர் மாநகராட்சித் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்ட 6 கவுன்சிலர்களை அதிமுக பக்கம் இழுத்து விட்டனர். இதையடுத்து இவர்கள் சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் விஜய் முன்னிலையில் அதிமுகவில் ஐக்கியமாகி விட்டனர். இதனால் வேலூர் மாநகராட்சியில் அதிமுகவின் பலம் 32 ஆக உயர்ந்து விட்டது.
புதிதாக உருவாக்கப்பட்ட வேலூர் மாநகராட்சிக்குநடந்த தேர்தலில் அதிமுகவின் கார்த்தியாயினி மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 60 வார்டு கவுன்சிலர் தேர்தலில் அதிமுக 26 இடங்களையும், திமுக 17 இடங்களையும், மதிமுக, தேமுதிக தலா 2 இடங்களையும், 9 இடங்களை சுயேச்சைகளும் பெற்றனர்.
மெஜாரிட்டி பலத்துக்கு மொத்தம் 30 கவுன்சிலர்கள் தேவை. இதனால் அதிமுகவுக்கு மேலும் 4 பேரின் ஆதரவு இருந்தது. இந்தநிலையில் அதிமுகவினர் கடுமையாக முயற்சித்து 6 சுயேச்சைகளை தேற்றி அதிமுக பக்கம் கொண்டு வந்து விட்டனர். இதையடுத்து அதிமுகவுக்கு மெஜாரிட்டி பலம் கிடைத்ததோடு, துணை மேயர் தேர்வையும் எளிதாக நடத்த வழி கிடைத்து விட்டது.
ஆறு சுயேச்சைகளையும் அதிமுகவில் சேர்க்கும் விழா சத்துவாச்சேரியில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடத்தினர். அதில், அமைச்சர் விஜய் முன்னிலையில், சுயேச்சை வேட்பாளர்கள் நித்தியகுமார், சூளை செல்வம், சண்முகம், சுகுமார், உஷாநந்தினி ஆகியோர் இணைந்து கொண்டனர். இன்னொசு சுயேச்சையான லூர்து மேரி என்பவர் மாலையில் வந்து அதிமுகவில் ஐக்கியமாகிக் கொண்டார்.
இப்படியாக வேலூர் மாநகராட்சியில் அதிமுகவுக்கு கூடுதல் பலமும், மெஜாரிட்டியும் கிடைத்து விட்டது.












Click it and Unblock the Notifications