நேபாளத்தில் கயிற்றுப் பாலம் விழுந்து விபத்து- சென்னை மாணவி உள்பட 3 பேர் பலி
சென்னை: நேபாளத்திற்கு சுற்றுலாப் பயணம் சென்றபோது கயிற்றுப் பாலம் ஒன்று திடீரென விழுந்தது. இதில் அந்தப் பாலத்தின் மீது நின்று இயற்கை அழகை ரசித்துக் கொண்டிருந்த சென்னையைச் சேர்ந்த மாணவி பிளாரன்ஸ் என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட மாணவி உயிர் இழந்ததாகக் கூறப்படுகின்றது. நேபாளத்தைச் சேர்ந்த கைடும் இறந்துள்ளதாகக் கூறப்படுகின்றது.
சென்னை மேற்கு முகப்பேரில் உள்ள மார்க் கிரிகோரியஸ் கல்லூரியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள் என மொத்தம் 45 பேர் நேபாளத்திற்கு சுற்றுலா சென்றனர். அங்கு திரிசூலி ஆற்றின் மேல் கட்டப்பட்டிருந்த கயிற்றுப் பாலத்தில் நின்று இயற்கை அழகை ரசிக்கையில் பாலம் திடீர் என்று அறுந்து விழுந்தது. இதில் அவர்கள் ஆற்றில் விழுந்தனர். அதில் பேராசிரியர் சம்போ ரனாய் உட்பட 12 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு பாரத்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்ப்ட்டனர்.
முதுநிலை 2ம் ஆண்டு படித்து வந்த பிளாரன்ஸ் என்ற மாணவி பலியானார். ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட ஹமீதா என்ற மேகாலயா மாணவி இறந்துவிட்டதாகக் கூறப்படுகின்றது. ஆனால் அவரது உடல் இன்னும் மீட்கப்படவில்லை. மேலும் அவர்களுக்கு ஊர் சுற்றுக்காட்டிய நேபாளத்தைச் சேர்ந்த கைடு பகதூர் அலி என்பவரும் உயிர் இழந்துள்ளதாகக் கூறப்படுகின்றது.
பிளாரன்ஸின் உடலை கொண்டு வரவும், காயமடைந்தவர்களை சென்னைக்கு அழைத்து வரவும் நேபாளத்திற்கு தனி விமானம் செல்லவிருக்கிறது என்று அக்கல்லூரி முதல்வர் பிரகாசம் தெரிவித்தார்.
இந்த சம்பவம் குறித்து முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறி்த்து ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சென்னை, மேற்கு முகப்பேரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பயிலும் 43 மாணாக்கர்கள் மற்றும் 2 ஆசிரியர்கள் நேபாளத்திற்கு கல்விச் சுற்றுலா சென்றிருந்தபோது, அவர்களில் சிலர் 22ம் தேதி சிலிங் என்னும் இடத்தில் உள்ள ஒரு ஆற்றுப்பாலத்தை கடக்கும்போது பாலம் உடைந்து ஆற்றில் விழுந்ததில், பாறையில் மோதி ஒரு மாணவி உயிரிழந்தார்; ஒரு மாணவி ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார்; மற்றும் 9 மாணாக்கர்கள் காயம் அடைந்தனர் என்ற செய்தி அறிந்து மிகுந்த துயருற்றேன்.
நேபாளத்தில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டு, இறந்த மாணவியின் உடலை தமிழகம் கொண்டு வருவதற்கு உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி புதுடெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்ல ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளேன். மேலும், இந்த விபத்தில் காயமடைந்த மாணாக்கர்களை மருத்துவமனையில் அனுமதித்து உயரிய சிகிச்சை அளிப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படியும், காணாமல் போன மாணவியை விரைந்து கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் நான் உத்தரவிட்டுள்ளேன்.
மாணவியின் அகால மரணத்தால் சொல்லொணாத் துயரத்தில் ஆழ்ந்திருக்கும் அவரது பெற்றோருக்கும், குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்று அதில் அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications