தனித்துப் போட்டியிட்டு தனது பலத்தை நிரூபித்த பாஜக!

காங்கிரஸ் கட்சியுடன் ஒப்பிடும்போது பாஜக பரவாயில்லை என்றே கூறலாம். காங்கிரஸைப் பொறுத்தவரை ஊரக உள்ளாட்சிகளில் மட்டுமே சற்று வார்டு உறுப்பினர்களைப் பெற்றுள்ளது. மாநகராட்சிகள்,நகராட்சிகளில் அது மக்கள் கவனத்தைப் பெறத் தவறி விட்டது. ஆனால் பாஜகவைப் பொறுத்தவரை கிராமப்புற ஊராட்சிகள் முதல் மாநகராட்சி வரை அது அசத்தியுள்ளது. இது ஆச்சரியத்தைத் தருவதாக அமைந்துள்ளது.
நகரப் பகுதிகளில் பாஜகவுக்கு நல்ல ஆதரவு இருப்பது இந்தத்தேர்தல் முடிவு மூலம் தெரிய வந்துள்ளது. இந்தக்க ட்சி, 2 நகராட்சித் தலைவர் பதவிகளைக் கைப்பற்றி அசத்தியுள்ளது. காங்கிரஸால் ஒரு நகராட்சித் தலைவர் பதவியைக் கூட பெற முடியாத நிலையில் இன்னொரு தேசியக் கட்சியான பாஜக இரட்டிப்பாக இதை சாதித்திருப்பது வியப்பளிக்கிறது. நாகர்கோவில் மற்றும் மேட்டுப்பாளையம் நகராட்சித் தலைவர்கள் பாஜகவைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
மாநகராட்சிகளைப் பொறுத்தவரை கோவையில் 2 வார்டுகளைப் பிடித்துள்ளது பாஜக. தூத்துக்குடி, நெல்லையில் தலா ஒரு கவுன்சிலரைப் பெற்றுள்ளது. இது ஆச்சரியமாக உள்ளது. அதேபோல சென்னை மாநகராட்சியில் மொத்தமாக 50 ஆயிரம் வாக்குகளை அது அள்ளியுள்ளது.
அதேபோல 37 நகராட்சிக் கவுன்சிலர்கள், 13 பேரூராட்சித் தலைவர்கள், 181 வார்டு உறுப்பினர்கள், 2 மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர்கள், 31 யூனியன் கவுன்சிலர்கள் என மொத்தம் 270 இடங்களைப் பிடித்துள்ளது பாஜக. இது நிச்சயம் பெரிய விஷயம்தான்.
கன்னியாகுமரியில் மட்டு்ம்தான் பாஜக உயிரோடு இருக்கிறது என்ற பொதுவான கருத்தை பாஜக இந்தத் தேர்தலில் பொய்ப்பித்துள்ளது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
கடந்த பல ஆண்டுகளாகவே பாஜகவைப் புறக்கணித்து வந்தன திராவிடக் கட்சிகள். பாஜகவுடன் சேர்ந்தால் மதச்சார்பு அடையாளம் வந்து விடுமே என்றஅச்சம்தான் இதற்குக் காரணம். ஆனால் இன்று மக்களிடம் எங்களது செல்வாக்கு முழுமையாக போகவில்லை, எங்களுக்கும் வாக்கு வங்கி உள்ளது என்பதை பாஜக நிரூபித்துள்ளது. நிச்சயம் இது திராவிடக் கட்சிகளை சிந்திக்க வைக்கும் என்று அக்கட்சியினர் நம்பிக்கையுடன் உள்ளனர்.
'வெட்டி'யாகப் பேசிக் கொண்டிருந்த காங்கிரஸ் தலைவர்களுடன் ஒப்பிடுகையில் தனது கட்சியை 'வெரைட்டி'யாக சாதிக்க வைத்து விட்ட பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் எவ்வளவோ பரவாயில்லைதான்...!












Click it and Unblock the Notifications