வாக்காளர்களுக்கு கள்ளநோட்டுகளை கொடுத்து வெற்றி பெற்ற ஊராட்சித் தலைவருக்கு வலைவீச்சு
திருப்பூர்: உள்ளாட்சித் தேர்தலில் வாக்காளர்களுக்கு கள்ளநோட்டுகளை கொடுத்து வெற்றிப் பெற்ற ஊராட்சித் தலைவர் உட்பட 4 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம், குன்னத்தூர் அடுத்த செம்மாண்டம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ரவி (40). திமுகவை சேர்ந்தவர். அவரது மனைவி ஹேமலதா (30). ஹேமலதா சின்னியம்பாளையம் ஊராட்சி முன்னாள் தலைவராக இருந்தவர். கடந்த உள்ளாட்சித் தேர்தலில் மீண்டும் ஊராட்சித் தலைவர் பதவிக்கு திமுக தரப்பில் போட்டியிட்டார்.
தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட ஹேமலதா, கணபதிபாளையம், பல்லக்காடு பகுதிகளை சேர்ந்த வாக்காளர் ஒருவருக்கு 1,000 ரூபாய் வீதம் பணம் கொடுத்தார். தேர்தல் முடிவுகள் வெளியான போது, ஹேமலதா வெற்றிப் பெற்றவராக அறிவிக்கப்பட்டார்.
இந்த நிலையில் ஹேமலதா அளித்த 1,000 ரூபாய் நோட்டை ரங்கன் (63) என்பவர் ரேஷன் கடையி்ல் பொருட்கள் வாங்க கொடுத்தார். அந்த நோட்டை பரிசோதித்த ரேஷன் கடைக்காரர், அது கள்ளநோட்டு என கூறி திரும்ப கொடுத்தார். இதில் அதிர்ச்சியடைந்த ரங்கன், தன்னை போல ஹேமலதாவிடம் பணம் வாங்கிய மற்றவர்களிடம் இதை தெரிவித்தார்.
ஹேமலதாவிடம் பணம் வாங்கிய மற்றவர்களும் அதைப் பரிசோதித்தபோது அவையும் கள்ளநோட்டுகள் என தெரிந்தது. இந்த தகவல் அறிந்த ஹேமலதா, அவரது கணவர் ரவி உட்பட 4 பேர் தலைமறைவாகிவிட்டனர். வாக்களிக்க அளிக்கப்பட்ட 1,000 ரூபாய் கள்ளநோட்டுகளை பறிமுதல் செய்த குன்னத்தூர் போலீஸார், தலைமறைவாக உள்ள 4 பேரையும் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications