இடியாப்ப சிக்கலில் எதியூரப்பா: ரூ.13 கோடி லஞ்சம் வாங்கியதாக 6வது வழக்கு பதிவு
பெங்களூர்: ஊழல் வழக்கில் கைதாகி பெங்களூர் சிறையில் இருக்கும் கர்நாடக முன்னாள் முதல்வர் எதியூரப்பா மீது 6வது ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெருமளவில் லஞ்சம் வாங்கிக் கொண்டு அரசு நிலத்தை தனியார் நிறுவனங்களுக்கு அடிமாட்டு விலைக்கு முறைகேடாக ஒதுக்கிய வழக்கில் கர்நாடக பாஜக முன்னாள் முதல்வர் எதியூரப்பா கடந்த 15ம் தேதி கைது செய்யப்பட்டு பெங்களூர், பரப்பன அக்ரஹாராவில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே அவர் மீது 5 ஊழல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதில் 2 வழக்குகளில் அவருக்கு ஜாமீன் கிடைத்துள்ளது. மேலும் 2 வழக்குகளில் அவருக்கு ஜாமீன் கிடைக்குமா என்பது நாளை தான் தெரியவரும். இந்நிலையில் எதியூரப்பா மீது 6வதாக ஒரு ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பத்ரா நீர்பாசன திட்டத்தை தனியார் நிறுவனத்தி்ற்கு கொடுத்ததில் எதியூரப்பா குடும்ப நிறுவனங்கள் ரூ. 13 கோடி லஞ்சம் வாங்கியுள்ளதாக மதச்சார்பற்ற ஜனதாதள எம்.எல்.சி ஒய்.எஸ்.வி. தத்தா புகார் கொடுத்தார். அவரது புகாரின்பேரில் லோக் ஆயுக்தா போலீசார் எதியூரப்பா மீது வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணையை வரும் நவம்பர் மாதம் 26ம் தேதிக்குள் முடித்து அறிக்கை சமர்பிக்குமாறு லோக் ஆயுக்தா நீதிபதி என்.கே. சுதிந்திர ராவ் லோக்ஆயுக்தா போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
ஆர்.என்.எஸ் குரூப் ஆஃப் கம்பெனீஸின் துணை நிறுவனமான முருதேஷ்வர் கம்பெனி பத்ரா நீர்பாசன திட்டத்தைப் பெற தவலகிரி ப்ராபர்டீஸ் பி.வி.டி. லிட் மற்றும் சஹ்யாத்ரி ஹெல்த்கேர் மற்றும் டயாக்னாஸ்டிக்ஸ்-க்கு ரூ. 13 கோடி லஞ்சம் கொடுத்துள்ளது. லஞ்சம் வாங்கிய இரண்டு நிறுவனங்கள் எதியூரப்பாவின் மகன்கள் பி.ஒய். ராகவேந்திரா, விஜயேந்திரா மற்றும் மருமகன் ஆர். என். சோஹன் குமாருக்கு சொந்தமானவை ஆகும்.












Click it and Unblock the Notifications