தீபாவளி: திகார் சிறையில் இருக்கும் பாஜக தலைவர்களுக்கு இனிப்பு வழங்கிய சுஷ்மா ஸ்வராஜ்
டெல்லி: திகார் சிறையில் உள்ள பாஜக தலைவர்கள் மற்றும் அத்வானியின் உதவியாளர் ஆகியோரை சந்தித்து தீபாவளி இனிப்பு வழங்கினார் அக்கட்சியின் மூத்த தலைவர் சுஷ்மா ஸ்வராஜ்.
கடந்த 2008-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் வாக்களிக்க எம்.பி.களுக்கு பணம் கொடுத்த வழக்கில் எம்.பி.யும், சமாஜ்வாடி கட்சி முன்னாள் உறுப்பினருமான அமர் சிங், பாஜக முன்னாள் எம்.பி.க்கள் மாகவீர் பகோரா, பக்கன் குலஸ்தே, பாஜக மூத்த தலைவர் அத்வானியின் உதவியாளர் சுதீந்திர குல்கர்னி ஆகியோர் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதில் அமர் சிங்கிற்கு உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 24ம் தேதி ஜாமீன் கிடைத்தது. ஆனால் மற்றவர்கள் இன்னும் திகார் சிறையில் தான் உள்ளனர். இந்நிலையில் நேற்று தீபாவளி பண்டிகை என்பதால் பாஜக மூத்த தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் தங்கள் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு இனிப்பு வழங்க திகார் சென்றார். அங்கு அவர் பகோரா, குலஸ்தே மற்றும் குல்கர்னியை சந்தித்து இனிப்பு வழங்கினார்.
முன்னதாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
திகார் சிறையில் இருக்கும் பாஜக தலைவர்களுக்கு கட்சி ஆதரவாக இருக்கும். அதை தெரிவிக்கத் தான் நான் சிறைக்கு சென்று அவர்களை சந்திக்கவிருக்கிறேன். தீபாவளி பண்டிகையையொட்டி அவர்களுக்கு கொடுப்பதற்காக இனிப்பு எடுத்துச் செல்கிறேன் என்றார்.
இதே வழக்கில் பாஜக எம்.பி. அசோக் அர்கால் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications