மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் பணிபுரியும் தேமுதிக எம்.எல்.ஏ.: மின் இணைப்பு கிடைக்குமா?
கடலூர்: திட்டக்குடி தேமுதிக எம்.எல்.ஏ. தமிழ் அழகன் அலுவலகத்தில் மின் இணைப்பு திடீர் என்று துண்டிக்கப்பட்டதால் அவர் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் தான் கடந்த 2 மாத காலமாக பணி புரிந்து வருகிறார்.
கடலூர் மாவட்ட எம்.எல்.ஏ.க்களுக்கு அரசு தனி அலுவலகக் கட்டிடங்கள் ஒதுக்கியுள்ளது. ஆனால் திட்டக்குடி தேமுதிக எம்.எல்.ஏ. தமிழ் அழகனுக்கு மட்டும் தனி அலுவலகம் இல்லை. மாறாக திட்டக்குடி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள தனிக் கட்டிடம் ஒன்று அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழ் அழகன் அந்த அலுவலகக் கட்டிடத்தை பயன்படுத்தத் துவங்கியதில் இருந்தே அங்கு தொலைபேசி இணைப்பு இல்லை. இந்நிலையில் அலுவலகத்திற்கு வந்த 1 வாரத்திலேயே பொதுவான தண்ணீர் வசதி, குடிநீர் இணைப்பு வசதி, மின் இணைப்பு வசதி ஆகியவை திடீர் என்று துண்டிக்கப்பட்டது என்றார் அவர்.
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது,
திட்டக்குடி மிகவும் பின்தங்கிய பகுதி. அதனால் மக்கள் மாலை மற்றும் முன் இரவு நேரத்தில் தான் என்னை சந்திக்க வருகின்றனர். அப்போது அலுவலகம் மின்சாரம் இன்றி இருண்டு உள்ளது. அதனால் நான் முன்னிரவு நேரத்தில் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் பணி புரிகிறேன்.
இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டுவிட்டேன். இருப்பினும் எந்தவித பலனும் இல்லை. குடிநீர், மின் இணைப்பு ஆகியவை ஏன் துண்டிக்கப்பட்டன, யார் துண்டித்தார்கள், அரசியல் தூண்டுதலா என்று தெரியவில்லை. தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த எனக்கு ஏன் இந்த நிலை என்றே தெரியவில்லை என்றார்.












Click it and Unblock the Notifications