சென்னை உயர் நீதிமன்றத்திற்கு வயது 150: 26ம் தேதி கொண்டாட்டங்கள் துவக்கம்
சென்னை: சென்னை உயர் நீதிமன்றக் கட்டிடம் கட்டப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. 150வது ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டங்கள் வரும் 26ம் தேதி முதல் துவங்குகிறது. இதில் சிறப்பு விருந்தினராக குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் கலந்து கொள்வார் என்று தெரிகிறது.
கடந்த 1862ம் ஆண்டு ஆங்கிலேய ஆட்சியின் போது சென்னை உயர்நீதிமன்றம் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டது. சென்னையில் கடற்கரை ஓரமாக உள்ள உயர் நீதிமன்றம், தமிழகம் மற்றும் பாண்டிசேரி பகுதிகளைச் சேர்ந்த வழக்குகளை விசாரித்து வருகிறது. இந்த நீதிமன்றம் கட்டப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்த நிறைவு விழாவை சிறப்பாகக் கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக உயர்நீதிமன்ற நீதிபதிகள் தலைமையில் வரவேற்பு குழு, ஆண்டு மலர் குழு என பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
150வது ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டங்கள் வரும் 26ம் தேதி துவங்க உள்ளது. இந்த விழாவில் முக்கிய விருந்தினராக ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்ட பலரை அழைக்க உயர்நீதி மன்ற விழாக் குழு முடிவு செய்துள்ளது. விழா நடக்க உள்ள இடம் மற்றும் மற்ற ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.