2ஜி: ''பிரணாப் முகர்ஜி சும்மா பார்த்தாரா.. படித்தாரா..?''-சர்ச்சையை கிளப்பும் சட்ட அமைச்சகம்

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக, கடந்த மார்ச் 25ம் தேதி மத்திய நிதியமைச்சகம் பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பிய குறிப்பில் உள்துறை அமைச்சரும் முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
சிதம்பரம் நிதியமைச்சராக இருந்தபோது முறைகேடாக நடந்த ஸ்பெரக்ட்ரம் விற்பனையை தடுத்து நிறுத்தத் தவறிவிட்டார் என்று அதில் கூறப்பட்டிருந்தது. நிதியமைச்சகத்தின் துணை இயக்குனர் பிஜிஎஸ் ராவ் எழுதிய இந்தக் குறிப்பு நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியின் ஒப்புதலுடன் பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டிருந்தது.
இதை தகவல் அறியும் சட்டம் மூலம் கடந்த செப்டம்பர் மாதத்தில் பெற்று, அதை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி, இந்த வழக்கில் சிதம்பரத்தையும் விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
இதையடுத்து பிரணாப்-சிதம்பரம் இடையே மோதல் ஏற்பட்டதால், பிரதமர் மன்மோகன் சிங்கும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் தலையிட்டு இருவரையும் சமரசம் செய்து வைத்தனர்.
இதைத் தொடர்ந்து அந்தக் குறிப்பில் இருந்த விவரங்களை நான் பார்த்தேன். ஆனால், முழுமையாக படிக்கவில்லை என்று கூறிய பிரணாப் முகர்ஜி, இத்தோடு இந்தப் பிரச்சனையை முடித்துக் கொள்ள வேண்டும் என்றார்.
அதே போல மத்திய அரசும், சம்பந்தப்பட்ட குறிப்பை பிரணாப் முகர்ஜி பார்த்தாரே தவிர, அதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்று வக்காலத்து வாங்கியது.
இந் நிலையில் கடந்த செப்டம்பர் 26ம் தேதி இந்த விவகாரம் குறித்து விளக்களித்து பிரதமர் மன்மோகன் சிங்குக்கு பிரணாப் முகர்ஜி ஒரு கடிதமும் அனுப்பினார். அதன் விவரங்கள் இப்போது வெளியே வந்துள்ளன.
பிரணாப் முகர்ஜி தனது கடிதத்தில், சிதம்பரம் தொடர்பான அந்தக் குறிப்பை நிதியமைச்சகத்தின் பொருளாதார விவகாரப் பிரிவு (Department of Economic Affairs) தான் பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பியது.
உண்மையைச் சொன்னால், அந்தக் குறிப்பை அனுப்பி வைக்குமாறு பொருளாதார விவகாரப் பிரிவு நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டது. இந்தக் குறிப்பை அதிகாரப்பூர்வமாக (official memorandum) அனுப்பி வைக்குமாறு பொருளாதார விவகாரப் பிரிவின் செயலாளரிடம், பிரதமர் அலுவலகத்தின் இணைச் செயலாளர் வினி மகாஜன் தொலைபேசி மூலம் கேட்டுக் கொண்டதால் தான் அது அனுப்பப்பட்டது என்று கூறப்பட்டுள்ளது.
(மார்ச் 25ம் தேதி இந்தக் குறிப்பு பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்படும் முன் 23ம் தேதி அதற்கு பிரணாப் ஒப்புதல் தந்திருந்தார்)
இந் நிலையில் பிரதமர் அலுவலகத்துக்கு நிதியமைச்சகத்தின் குறிப்பு அனுப்பப்படும் முன் அதில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்றக் கூட்டுக் குழுவில் உள்ள பாஜக உறுப்பினர்கள் என்று குற்றம் சாட்டினர்.
நிதி அமைச்சகம் தயாரித்த குறிப்பு பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பப்படுவதற்கு 2 நாட்களுக்கு முன் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. நிதியமைச்சரின் 'ஒப்புதல்' என்பதற்கு பதிலாக நிதியமைச்சரின் 'பார்வைக்கு' என்று திருத்தம் செய்யப்பட்டுள்ளது என்றனர்.
இதையடுத்து நாடாளுமன்ற கூட்டுக் குழு, மத்திய சட்ட அமைச்சகத்திடம் சில கேள்விகளை எழுப்பியது. குறிப்பாக நிதியமைச்சகத்தின் குறிப்பில் இருந்த விவரங்களை நான் 'பார்த்தேன்' என்று பிரணாப் முகர்ஜி, கூறுவதற்கு முழு அர்த்தம் என்ன என்று கேள்வி எழுப்பியது.
இதற்கு சட்ட அமைச்சகம் அனுப்பி வைத்துள்ள பதில், பிரணாப் முகர்ஜியை சிக்கலில் மாட்ட வைக்கும் உள்ளது. நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு சட்ட அமைச்சகம் அனுப்பியுள்ள பதில் கடிதத்தில்,
பிரதமருக்கு அனுப்பிய குறிப்புக்கு ஒப்புதல் அளித்தவர் (பிரணாப் முகர்ஜி), அந்தக் குறிப்பில் இருந்த விவரங்களை ''நான் பார்த்தேன். ஆனால், அதிலுள்ள விவரங்களை முழுமையாகப் படிக்கவில்லை'' என்று கூறுவதை ஏற்க முடியாது. 'பார்த்தேன்' என்றால் 'சும்மா பார்த்தது' அல்ல, படித்தார் என்று தான் அர்த்தம் என்று கூறியுள்ளது சட்ட அமைச்சகம்.
இதன்மூலம் பிரணாப் முகரிஜியின் பார்வைக்காகவே குறிப்பு அனுப்பப்பட்டது, ஒப்புதலுக்காக அல்ல என்ற மத்திய அரசின் வாதமும், பிரணாப் முகர்ஜியின் வாதமும் அடிபட்டுள்ளது.
இதையடுத்து அடங்கி விட்டதாக கருதப்பட்ட நிதியமச்சகத்தின் '2ஜி குறிப்பு' விவகாரம் மீண்டும் உயிர் பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications