மிகவும் வேண்டப்பட்ட நாடு என்ற அந்தஸ்தை இந்தியாவுக்கு வழங்கவில்லை! -பாகிஸ்தான் பல்டி
இஸ்லாமாபாத்: மிகவும் வேண்டப்பட்ட நாடு என்ற அந்தஸ்து வழங்க பாகிஸ்தான் அனுமதி அளிக்கவில்லை என்று அந்நாட்டு பிரதமர் யூசுப் ரசா ஹிலானி தெரிவித்துள்ளார்.
கேன்ஸ்சில் நடைபெற்று வரும் ஜி-20 மாநாட்டில் பேசும் போது பாகிஸ்தான் நாட்டு அமைச்சர்கள் இந்தியாவுக்கு மிகவும் வேண்டப்பட்ட நாடு அந்தஸ்து வழங்கப்படும் என பேசினர்.
இந்தியாவுக்கு வழங்கப்பட்ட 'மிகவும் வேண்டப்பட்ட நாடு' அந்தஸ்தை திரும்பப்பெறும் பேச்சுக்கே இடமில்லை. இயல்பான வர்த்தக உறவின் ஒரு பகுதியே இந்த நடவடிக்கை' என, இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் சாகித் மாலிக் கூறினார்.
வெள்ளிக்கிழமையன்று மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரத்தை சந்தித்துப் பேசிய இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் இந்தியாவுக்கு மிகவும் வேண்டப்பட்ட நாடு அந்தஸ்து அளிக்கும் நடைமுறைகள் இயல்பாக நடந்து வருகின்றன. இந்த முடிவிலிருந்து பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை. பாகிஸ்தான் வர்த்தகத் துறை செயலர், இம்மாதம் இந்தியா வருகிறார். அப்போது, இதற்கான நடைமுறைகள் வழங்கப்படும்,'' என்றார்.
பாக். பிரதமர் மறுப்பு
ஆனால் பாகிஸ்தான் பிரதமர் பிரதமர் யூசுப் ரசா ஹிலானி இஸ்லாமாபாத்தில் நிருபர்களிடம் கூறும் போது இந்தியாவுக்கு மிகவும் வேண்டப்பட்ட நாடு அந்தஸ்து வழங்க பாகிஸ்தான் அனுமதி அளிக்கவில்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளார்.
வர்த்தக அமைச்சகம் மட்டுமே இருதரப்பு பேச்சுவார்த்தைகளை முன்னோக்கி நகர்த்த, பிரச்சினையில் சமரசம் காண முயன்று வருகிறது என்று கூறினார்.
இந்த விவகாரத்தில் முன்னோக்கி செல்ல வேண்டும் என்றால் பாகிஸ்தான் அமைச்சரவை ஒப்புதல் வழங்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்தியாவுக்கு மிகவும் வேண்டப்பட்ட நாடு என்ற அந்தஸ்தினை 1996 – ம் ஆண்டே பாகிஸ்தானுக்கு இந்தியா வழங்கிவிட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications