வடகிழக்கு பருவமழை இந்தாண்டு 29% அதிகம் - நாளை முதல் வெயில் அடிக்கலாம்

அக்டோபர் மாதம் இறுதி வாரத்தில் தொடங்கிய வடகிழக்குப் பருவமழை பத்துநாட்களுக்கும் தமிழ்நாடு முழுவதும் மேலாக பதம் பார்த்தது. கொட்டித் தீர்த்த கனமழையால் மாநிலத்தின் தலைநகரமான சென்னை வெள்ளக்காடாக மாறியுள்ளது.
போக்குவரத்து பாதிப்பு
சென்னையின் புறநகர் பகுதிகளான பீர்க்கங்கரணை, குரோம்பேட்டை, பல்லாவரம், தாம்பரம், வேளச்சேரி, பம்மல் உள்ளிட்ட இடங்களில் குடியிருப்புகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.
தாம்பரம் – முடிச்சூர் சாலையில் வெள்ளநீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. முடிச்சூர் சாலையில் 25-க்கும் மேற்பட்ட இடங்களில் சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் பலரும் தவறி விழுந்து காயமடைந்தனர்.
விஷ ஜந்துகள் படையெடுப்பு
பல்லாவரம் நகராட்சி கீழ்கட்டளையில் 23 தெருக்களிலும் மழைநீர் குளம்போல தேங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். அம்பாள் நகர் பகுதியில் மழைநீருடன் பாம்பு, தேள் உள்ளிட்ட விஷ ஜந்துகளும் படையெடுத்து வருவதால் வீட்டுக்குள் வசிக்க கூட மக்கள் அச்சமடைந்தனர். மழைநீரை வெளியேற்ற விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை சுற்றியுள்ள ஏரிகள் நிரம்பி வழிவதால் உபரிநீர் வெளியேற்றப் படுகின்றன. புழல் ஏரியில் இருந்து விநாடிக்கு 2 ஆயிரம் கனஅடிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. செம்பரம்பாக்கம் ஏரியின் மூன்றாம் மதகு வழியாக விநாடிக்கு 200 கனஅடிநீர் திறந்துவிடப்படுவதால் கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
மேட்டூர் அணை உயர்வு
தொடர்மழையினால் தமிழ்நாட்டில் உள்ள முக்கிய அணைகள் நிரம்பி வழிகின்றன. கோவை மாவட்டத்தில் பெய்த கனமழையால் பொள்ளாச்சியை அடுத்த வால்பாறையில் சோலையாறு, ஆழியாறு அணைகள் நிரம்பி வழிகின்றன. ஆழியாறு அணையில் இருந்து உபரிநீர் ஆற்றில் திறந்துவிடப்படுகிறது. மேட்டூர் அணைக்கு சராசரியாக 40 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது இதனால் ஞாயிறு மாலைக்குள் அணைநீர்மட்டம் நூறு அடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை அதிகபட்சமாக கடலூரில் 603 மில்லி மீட்டர் அளவு மழை பெய்துள்ளது. இதுவரை வழக்கமான அளவை விட இந்த ஆண்டு 29 சதவிகிதம் கூடுதலாக மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மழை சற்று ஓய்ந்திருந்தாலும் அரபிக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வுநிலையால் அடுத்த 48 மணி நேரத்திற்கு மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications