2ஜி விவகாரத்தில் ப.சிதம்பரத்துக்கு எதிரான சாமி வழக்கு- விசாரணை ஒத்திவைப்பு

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் அப்போதைய நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரத்தையும் குற்றம் சாட்டப்பட்டவராக சேர்க்க வேண்டும் என்று ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியசாமி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த மாதம் 24ம் தேதி மனு தாக்கல் செய்தார்.
அதில், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் விலை நிர்ணயம் மற்றும் நுழைவுக்கட்டணம் ஆகிய அம்சங்களில் ப.சிதம்பரத்துக்கும், ஆ.ராசாவுக்கும் முக்கிய பங்கு இருக்கிறது. இது தொடர்பான புதிய உண்மைகளை நீதிமன்றம் வெளிக்கொண்டு வர வேண்டும் என்று சுப்பிரமணியசாமி கேட்டுக்கொண்டிருந்தார்.
ப.சிதம்பரமும், ஆ.ராசாவும் சேர்ந்துதான் இவற்றை நிர்ணயித்திருக்கிறார்கள். கடந்த பிப்ரவரி மாதம் ராஜ்யசபையில் சிதம்பரம் ஆற்றிய பேச்சில் இது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் சுப்பிரமணியசாமி அப்போது கூறியிருந்தார்.
மேலும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட சிலரை வேண்டுமென்றே சிபிஐ அதிகாரிகள் வழக்கில் சேர்க்கவில்லை. எனவே அவர்களுக்கும் அதிகாரிகளுக்கும் உள்ள தொடர்பு குறித்து விசாரணை செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் சுப்பிரமணியம் சாமி கேட்டுக்கொண்டிருந்தார்.
இந்த பிரச்சனை தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தின் விசாரணையில் நிலுவையில் இருப்பதால் வழக்கு விசாரணையை நவம்பர் 8ம் தேதிக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி ஒத்திவைத்தார்.
இந்த நிலையில் இன்று இந்த மனு மீதான விசாரணை சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ப.சிதம்பரத்துக்கும், ஆ.ராசாவுக்கும் இடையே ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக நடைபெற்ற உரையாடல்கள் தொடர்பான ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும்படி சிபிஐ அதிகாரிகளுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும் சாமியின் கோரிக்கை மீதான விசாரணையை டிசம்பர் 3ம் தேதிக்கு ஒத்திவைப்பதாகவும் நீதிபதி அறிவித்தார்.












Click it and Unblock the Notifications