மாற்றுத் திறனாளியோடு, காதலியை சேர்த்து வைத்த அதிமுக எம்.எல்.ஏ. காமராஜ்
கரூர் மாவட்டம், தரகம்பட்டியை அடுத்த காளையபட்டியில் வசிப்பவர் சுப்பிரமணி. இரண்டரை அடி உயரமே உள்ள மாற்றுத் திறனாளி. இவர் காதல் திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த காதல் திருமணம் பற்றி நம்மிடம் விரிவாகப் பேசினார்.
சுப்பிரமணி நம்மிடம் கூறியதாவது,
சார், எனது சொந்த ஊர் காளையப்பட்டி. எங்க அப்பா, அம்மா இரண்டு பேருமே விவசாயக் கூலி. இரண்டு அக்கா. அவர்கள் இருவருக்கும் திருமணமாகி வெளியூரில் வசிக்கிறார்கள்.
நான் பிறந்தது முதல் எனக்கு இந்த குறைபாடு உள்ளது. பிளஸ் டூ படித்து முடித்துவிட்டு வேலை கேட்டு பல பக்கம் அலைந்தேன். என்னை எல்லாரும் மேலே கீழே பார்த்தார்களே தவிர யாரும் வேலை கொடுக்கவில்லை. வேலை கேட்டு சென்ற பக்கம் எல்லாம் தோல்வி தான்.
இந்த நிலையில் தான் எங்க தொகுதி (கிருஷ்ணராயபுரம்) அதிமுக சட்டமன்ற உறுப்பினர் காரமராஜ் தொகுதி மக்களுக்கு நன்றி கூற எங்க ஊருக்கு வந்தார். அதை கேள்விப் பட்டு அவரிடம் வேலை கேட்டு மனு கொடுத்தேன். அதனால் அவர் அலுவலகத்தில் உதவியாளராக வேலை போட்டு கொடுத்துள்ளார்.
இந்த நிலையில் சீரகம்பட்டியில் உள்ள எங்க அக்கா வீட்டிற்கு சென்ற போது, வெண்ணிலாவை பார்த்தேன். இரண்டு பேரும் அடிக்கடி பார்ப்போம். அப்படியே காதல் டெலவப் ஆயிடுச்சு. கடந்த ஒரு வருடமாக நாங்க மனதார காதலித்தோம்.
வெண்ணிலாவையே திருமணம் செய்ய விரும்பினேன். இதற்கு இரு வீட்டிலும் சம்மதம் கிடைக்குமா என சந்தேகம் இருந்தது. அப்புறம் வெண்ணிலா வீட்டில் மட்டும் கொஞ்சம் எதிர்ப்பு இருந்துச்சு. பின்பு அதவும் சரியாகிவிட்டது. இரு வீட்டார் சம்மதத்துடன் காளையப்பட்டி காளியம்மன் கோவிலில் நவம்பர் 3 ம் தேதி உற்றார் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டோம் என்றார் வெட்கம் பொங்க.
சுப்பிரமணி காதல் திருமணத்திற்காக ஊக்கம் கொடுத்து அவர்களை சேர்த்து வைத்துள்ளார் கிருஷ்ணராயபுரம் அதிமுக எம்.எல்.ஏ. காமராஜ்.
அது மட்டும் அல்ல கல்யாணதிற்கு சட்டை, வேஷ்டி, சேலை, வாட்ச் என பரிசுகளை வாங்கி கொடுத்து அசத்தியுள்ளார்.