ரயில் முன் பாய்ந்து தெலுங்கானா மாணவர் தற்கொலை- ஹைதராபாத்தில் பதட்டம்
ஹைதராபாத்: தெலுங்கானா தனி மாநிலம் அமைக்கக் கோரி ஹைதராபாத் உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் படித்து வந்த மாணவர் ஒருவர் ஓடும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதால் ஹைதராபாத்தில் பதட்டம் தொற்றிக் கொண்டுள்ளது.
உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் 2ம் ஆண்டு எம்.ஏ. படித்து வந்தவர் நச்சினி நாகேஷ். 30 வயதான இவர் தெலுங்கானா தனி மாநில போராட்டத்தில் தீவிரமாக பங்கெடுத்து வந்தார். இந்தநிலையில் அடிலாபாத்தில் உள்ள தனது சொந்த ஊரான சிந்தகுடாவில் ஓடும் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். தெலுங்கானா மாநிலம் அமைய வேண்டும் என்று கோஷமிட்டபடி அவர் ரயில் முன்பு பாய்ந்ததாக கூறப்படுகிறது.
மேலும் அவர் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கும், பிரதமர் மன்மோகன் சிங்குக்கும் ஒரு கடிதம் எழுதி வைத்திருந்தார். அதில், தனி தெலுங்கானா மாநிலத்தை அமைத்து இப்பகுதி இளைஞர்களின் வேலையில்லாத் திண்டாட்டத்திற்கு முடிவு கட்டுமாறு அவர் கோரியிருந்தார்.
நாகேஷின் பெற்றோரும் தெலுங்கானா போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நாகேஷின் தற்கொலையால் உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் பெரும் சோகம் கவ்வியுள்ளது. மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். ஊர்வலம் செல்ல அவர்கள் முயன்றபோது போலீஸார் தடுத்தனர். இதையடுத்து போலீஸார் மீது அவர்கள் கல்வீசித் தாக்கினர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து ஹைதராபாத் மற்றும் தெலுங்கானா பகுதிகளில் பாதுகாப்பும் கண்காணிப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications