33 பேர் உயிருடன் கொளுத்தப்பட்ட குஜராத் கலவர வழக்கு: 31 பேருக்கு ஆயுள், 42 பேர் விடுவிப்பு

குஜராத்தின் மெஹ்சானாவில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் சர்தார்புரா கலவர வழக்கு நடந்து வந்தது. கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்திற்கு பிறகு சர்தார்புராவில் கலவரம் வெடித்தது. அந்த வழக்கில் 73 பேர் மீது கொலை, கொலை முயற்சி, கலவரத்தை தூண்டியது, தீ வைத்தது உள்ளிட்ட குற்றங்கள் சுமத்தப்பட்டது.
33 பேர் உயிருடன் எரிப்பு
கடந்த 2002ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28ம் தேதி சர்தார்புரா கிராமத்தில் உள்ள இப்ராஹிம் ஷேக் என்பவர் வீட்டில் பலர் அடைக்கலம் புகுந்தனர். அப்போது ஒரு கும்பல் அந்த வீட்டை தீ வைத்து எரித்தது. இதில் 20 பெண்கள் உள்பட 33 பேர் உடல் கருகி உயிர் இழந்தனர்.
இந்த வழக்கில் 76 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது. அதில் இருவர் வழக்கு நிலுவையில் இருந்தபோது இறந்துவிட்டனர். ஒருவர் சிறுவன் என்பதால் சிறுவர்களுக்கான நீதிமன்றத்தில் அந்த விசாரணை நடந்து வருகிறது.
கடந்த 2009ம் ஆண்டு 73 பேர் மீது நீதிமன்றம் குற்றம்சாட்டி விசாரணையை முடுக்கிவிட்டது. அவர்கள் திட்டமிட்டு தான் அந்த வீட்டை எரித்தனர். அதுவும் யாரோ உள்ளூர் தலைவரின் தூண்டுதலில் செய்துள்ளனர் என்று அரசு தரப்பு வழக்கறிஞர் வாதாடினர்.
பரபரப்பான இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் குற்றம்சாட்டப்பட்ட 73 பேரில் 42 பேர் விடுவிக்கப்பட்டனர், 31 பேர் மீதான குற்றம் உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து அந்த 31 பேருக்கும் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
மாஜி அமைச்சரிடம் நானாவதி கமிஷன் விசாரணை
இதற்கிடையே, குஜராத் கலவரம் தொடர்பாக குஜராத் மாநில முன்னாள் அமைச்சர் ஜடேஜாவிடம் நானாவதி கமிஷன் விசாரணை நடத்தியுள்ளது.
கோத்ரா ரயில் எரிப்பு மற்றும் அதைத் தொடர்ந்து நடந்த கலவரம் தொடர்பாக நானாவதி கமிஷன் விசாரித்து வருகிறது. இந்த நிலையில் சம்பவம் நடந்த 2002ம் ஆண்டில் மோடி அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த முன்னாள் அமைச்சர் ஜடேஜா என்பவரிடம் நானாவதி கமிஷன் விசாரணை நடத்தியுள்ளது.
விசாரணையில் என்ன கேட்கப்பட்டது என்பது குறித்து ஜடேஜாவிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, அதுகுறித்து இப்போது கூற முடியாது என்றார்.












Click it and Unblock the Notifications