கோவையில் "அருகாமையில் காவல்' திட்டம் - கமிஷனர் அமரேஷ் பூஜாரி அதிரடி
கோவை: கோவை மாநகரில் 'அருகாமையில் காவல்' என்ற திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக கோவை போலீஸ் கமிஷனர் அமரேஷ் பூஜாரி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
கோவை மாநகரில் கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் குற்றச் செயல்கள் குறைந்துள்ளது.
கடந்த 5 மாதங்களில் மட்டும் நகை பறிப்பு, திருட்டு, வழிப்பறி என 71 வழக்குகளில் தொடர்புடைய சாமியப்பன், ராம்குமார், கண்ணன், கட்டை ராஜா, செந்தில்நாதன் போன்றவர்கள், கொலைக் குற்றவாளிகள், தொடர் சங்கிலி பறிப்பு குற்றவாளிகள் என மொத்தம் 24 குற்றவாளிகள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இந்த வழக்குகளில் திருடு போன ரூ. 60 லட்சம் மதிப்பிலான தங்கம், வெள்ளி நகைகளும், ரூ.16 லட்சம் மதிப்பிலான மோட்டார் சைக்கிள்கள், ரூ.45 லட்சம் மதிப்பிலான கார்கள், வேன், லாரிகளும், ரூ.11 லட்சம் மதிப்பிலான செல்போன், லேப்டாப்களும், ரொக்கப்பணம் ரூ.8 லட்சம் உள்பட ரூ.1.40 கோடி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும்.
கோவை மாநகரத்தில் துணை கமிஷனர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்ற நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
அதே போன்று முதன் முதலாக கோவை மாநகரில் 'அருகாமையில் காவல்' என்ற திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின்படி ஒவ்வொரு காவல் நிலையத்தில் இருந்தும் இரண்டு சப் - இன்ஸ்பெக்டர்கள் அவரவர் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு சென்று ஏதாவது குறைகள் இருக்கிறதா என்று விசாரித்து, மக்கள் கூறும் கருத்துக்களின்படி நடவடிக்கை எடுப்பார்கள்.
இவ்வாறு போலீசார் வீடுகளுக்கே சென்று குறைகளை கேட்பதால் பொது மக்களுக்கும், போலீசாருக்கும் நல்லுறவு ஏற்படும். பொதுமக்கள் மத்தியிலும் போலீசார் என்ற பயம் நீங்கும் என்றார்.












Click it and Unblock the Notifications