புனே லவாசா திட்டத்தை ஆதரித்து பேசிய முதல்வர் சவானுக்கு அன்னா ஹசாரே எதிர்ப்பு
புனே: லவாசா திட்டத்தை ஆதரித்து பேசிய மகாராஷ்டிரா முதல்வர் பிரித்திவ் சவானுக்கு, சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம், புனே நகரை அடுத்த லவாசா மலைப் பகுதியில் லவாசா குடியிருப்புத் திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டப்பட்டது. ஆனால் இந்த திட்டத்தில் பல முறைகேடுகள் நடந்திருப்பதாக சர்ச்சை எழுந்தது. அதனையடுத்து அந்த திட்டத்தை செயல்படுத்த சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே மற்றும் மேதா பட்கர் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அந்த திட்டத்தை எதிர்த்து, மாசு கட்டுப்பாட்டு வாரியம் மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.
இதுகுறித்த வழக்கு மும்பை உயர்நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த வாரம் லவாசா திட்டம் குறித்து கருத்து தெரிவித்த மகாராஷ்டிரா முதல்வர் சவான், அந்த திட்டம் மாநிலத்துக்கு தேவையான ஒரு முக்கிய திட்டம் என்று தெரிவித்தார்.
சவானின் அந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள சமூக ஆர்வலர்கள் அன்னா ஹசாரே மற்றும் மேதா பட்கர் ஆகியோர் சவானுக்கு கடந்த 7ம் தேதி கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். அதில் லவாசா தி்ட்டம் குறித்து வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும் போது, அந்த திட்டத்துக்கு அனுமதி கேட்பது நீதிமன்ற அவமதிப்பு என குற்றசாட்டி உள்ளனர்.
இதுகுறித்து அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது,
லவாசா திட்டத்துக்கு எதிராக மகாராஷ்டிரா மாசு கட்டுப்பாட்டு வாரியம் கிரிமினல் வழக்கு தொடுத்துள்ளது. இந்த நிலையில் அந்த திட்டத்துக்கு முதல்வர் என்ற வகையில் சவானும் எதிர்ப்பு தெரிவித்திருக்க வேண்டும். ஆனால் சவான், அந்த திட்டத்தை ஆதரித்து பொதுவான கருத்து தெரிவித்துள்ளார். சவானின் நடவடிக்கைகள் அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்துகிறது, என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.