ஜோதிட விவகாரத்தில் அடி வாங்கும் தவெக! கவுண்டம்பாளையம் எம்எல்ஏ செயலால் உருவான அதிருப்தி!
கோயம்புத்தூர்: தேர்தலுக்கு முன்பு இருந்தே கவுண்டம்பாளையம் தவெக எம்எல்ஏ மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்திருந்தன. இந்நிலையில், ஜோதிட அலுவலகத்திற்கு அரசு அதிகாரிகளை அழைத்து வந்து ஆலோசனை மேற்கொண்டதாக புதிய சர்ச்சையில் அவர் சிக்கியிருக்கிறார்.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்த கனிமொழி சந்தோஷ் கோவை கவுண்டம்பாளையம் தொகுதியில் எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டிருந்தார்.

கனிமொழி சந்தோஷ்
ஆனால், தேர்தலுக்கு முன்பு இருந்தே பல்வேறு சலசலப்புகளில் அவர் சிக்கியிருந்தார். ஜோதிடத்தில் நம்பிக்கை வைத்தவர்களை எல்லாம் தவெக வேட்பாளர்களாக தேர்தலில் நிற்க வைக்கிறது எனில், கட்சியின் திட்டம் என்ன? சிந்தாந்தம் என்ன? என்று கேள்விகள் எழுந்திருந்தன. அதேபோல ஜோதிடம் மூலம் நோய்கள் குணப்படுத்தப்படும் என்று கனிமொழி சந்தோஷ் பேசியிருந்ததும் விவாதங்களை எற்படுத்தியிருந்தது.
இருப்பினும் இந்த விமர்சனங்களை எல்லாம் உடைத்து அவர் தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறார். ஆனால் அவர் மீதான சலசலப்பு இன்னும் குறையவில்லை. மாறாக அதிகரிக்கதான் செய்திருக்கிறது.
பிளாஸ்டிக் சேரில் அதிகாரிகள்
அதாவது, நேற்று இவர் தனது வீட்டில் வைத்து அரசு அதிகாரிகளை சந்தித்திருந்தார். இந்த சந்திப்பின்போது இவர் மட்டும் சொகுசாக சோபாவில் உட்கார்ந்துக்கொண்டு, அரசு அதிகாரிகளை குறிப்பாக வயதில் மூத்த அதிகாரிகளை பிளாஸ்டிக் நாற்காலியில் அமரவைத்து பேசியிருந்தது சர்ச்சையாக வெடித்திருந்தது. அதேபோல அரசு அதிகாரிகளை ஏன் வீட்டிற்கு வரவழைத்து ஆலோசனை மேற்கொள்ள வேண்டும் என்றும் கேள்விகள் எழுந்திருந்தன.
இதற்கு பதிலளித்திருந்த கனிமொழி சந்தோஷ், ஆலோசனை நடத்தப்பட்டது என்னுடைய வீடு கிடையாது, அது ஜோதிட அலுவலகம் என்று விளக்கமளித்திருந்தார்.
ஜோதிடத்தில் சிக்கும் தவெக
அவருடைய விளக்கத்திற்கு பின்னர்தான் பிரச்சனையே பெரியதாக வெடித்தது. அதாவது, தவெக தன்னை திமுக மற்றும் அதிமுகவுக்கு மாற்றாக காட்டிக்கொள்கிறது. குறிப்பாக தன்னை மதச்சார்பற்ற அரசாக கூறிக்கொள்கிறது. அப்படி இருக்கும்போது ஜோதிடம் தொடர்பான விஷயங்களுக்கு தொடர்ந்து முக்கியத்தும் அளித்து வருவதாக விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.
முதலமைச்சர் விஜய்யின் செயல்
விஜய் முதலமைச்சரானதும் அவரது ஜோதிடருக்கு அரசு பணி வழங்கப்பட்டிருந்தது. இது சட்டமன்றத்திலேயே கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியது. "ஜோதிடருக்கு அரசு வேலை கொடுத்ததன் மூலம், இந்த அரசு இளைஞர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறது?" என்று பிரேமலாதா விஜயகாந்த் காட்டாமாக கேள்வி எழுப்பியிருந்தார்.
பெரியதாகும் பிரச்சனை
விஜய் முதலமைச்சர் பதவியில் உட்கார கை கொடுத்த இடதுசாரிகளும், ஜோதிடருக்கு அரசு பதவி கொடுத்ததை கொஞ்சமும் ரசிக்கவில்லை. இப்படி இருக்கையில்தான் கவுண்டம்பாளையம் எம்எல்ஏ ஜோதிடர் அலுவலகத்தில் வைத்து அரசு அதிகாரிகளை சந்தித்திருந்தது கடுமையான விமர்சனங்களை கிளப்பியிருக்கிறது.












Click it and Unblock the Notifications