சிவகங்கை பூங்காவில் சினை மானை கொம்பால் குத்திக் கொன்ற ஆண் மான்
தஞ்சை: தஞ்சாவூரில் உள்ள சிவகங்கை பூங்காவில் சினை மானை ஆண் மான் ஒன்று கொம்பால் குத்திக் கிழித்துக் கொன்றது.
தஞ்சாவூரில் உள்ள சிவகங்கை பூங்காவில் 10 ஆண் மான்கள் உள்பட 30 மான்கள் உள்ளன. அதை பார்த்து ரசிக்க ஏராளமானோர் அந்த பூங்காவுக்கு வருகின்றனர். இந்நிலையில் நேற்று மான்களைப் பார்க்க வந்த பார்வையாளர்கள் ஒரு சினை மான் ரத்தக் காயங்களுடன் உணர்வின்றிக் கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே இது குறித்து பூங்கா அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அதிகாரிகள் வந்து சினை மானை தூக்கிக் கொண்டு கால்நடை மருத்துவர்களிடம் சென்றனர். ஆனால் அந்த மான் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
10 வயது மதிக்கத்தக்க அந்த சினை மானை ஒரு ஆண் மான் கடந்த 7ம் தேதி இரவு கொம்பால் குத்திக் கொன்றுள்ளது. அக்டோபர்-நவம்பர் மாதங்களில் மான்கள் இனப்பெருக்கம் செய்யும். அப்போது மான்கள் கடுமையாக சண்டைபோடும் என்று பூங்கா அதிகாரிகள் தெரிவித்தனர். அப்படி ஏற்பட்ட சண்டையில் இந்த மான் கொல்லப்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
பூங்காவிற்கு அருகில் உள்ள பெத்தண்ணன் கலையரங்கில் அந்த மான் புதைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications