அதிமுக எம்எல்ஏ எம்.கே.செல்வராஜை கைது செய்ய சேலம் நீதிமன்றம் உத்தரவு
சேலம்: சேலம் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம்.கே.செல்வராஜை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சேலம் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் எம்.கே.செல்வராஜ். கடந்த 2008ம் ஆண்டு சேலம் புதிய பேருந்து நிலையம் அருகில் திமுகவினர் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியது தொடர்பாக சேலம் பள்ளபட்டி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செயப்பட்டது.
இந்த வழக்கு சேலம் இரண்டாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் சேலம் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம்.கே.செல்வராஜ் நேரில் ஆஜராகவில்லை. மேலும், தொடர்ந்து வழக்கு விசாரணைக்கு நீதிமன்றத்துக்கும் வரவில்லை.
இதனால் செல்வராஜை கைது செய்து நீதிமன்றத்தில் கொண்டு வந்து நிறுத்துமாறு நீதிபதி(பொறுப்பு) ஸ்ரீ வித்யா காவல்துறைக்கு உத்தரவிட்டார். இந்த வழக்கு வரும் 28ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
அதிமுக எம்எல்ஏ மீது நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.