பிரபாகரன் பிறந்த நாளன்று புதுக் கட்சி தொடங்குகிறார் வேல்முருகன்?

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸின் போக்கையும், கட்சிப் பொதுச் செயலாளர் வடிவேல் ராவணனையும் கடுமையாக விமர்சித்துப் பேசியதைத் தொடர்ந்து வேல்முருகன் அதிரடியாக நீக்கப்பட்டார். கட்சியின் முன்னணித் தளபதிகளில் ஒருவரான வேல்முருகனுக்கு ஏற்பட்ட இந்த கதி பாமகவினரிடம் மட்டுமல்லாமல் மாற்றுக் கட்சியினர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
நீக்கப்பட்ட வேல்முருகனை சேர்க்க கிட்டத்தட்ட தமிழகத்தின் அத்தனை பிரதான கட்சிகளும் முண்டியடித்துக் கொண்டிருக்கின்றன. திமுக சார்பில் நூல் விட்டுப் பார்த்தனர். அதிமுகவும் முயன்றது, பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் நேரடியாக வேல்முருகனிடமே பேசினார். தேமுதிகவும் வேல்முருகனை அணுகிப் பார்த்தது. காங்கிரஸ், மதிமுக என பல கட்சிகளும் முயன்றன.
வேல்முருகன் சிறந்த பீல்ட் ஒர்க்கர், இளைஞர் பட்டாளத்தை தன் பக்கம் வைத்திருப்பவர் என்ற காரணத்தால் வேல்முருகனுக்கு இத்தனை கிராக்கி ஏற்பட்டுள்ளது. இருப்பினும் தனி இயக்கம் காண வேல்முருகன் முடிவு செய்துள்ளார்.
இந்த நிலையில் தனது புதுக் கட்சியை விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் பிறந்த நாளான நவம்பர் 27ம்தேதி தொடங்க வேல்முருகன் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரபாகரன் பிறந்த நாள் மாவீரர் தினமாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினத்தில் வேல்முருகன் தனது புதிய கட்சியைத் தொடங்குகிறார் என்று கூறப்படுகிறது.
மேலும் அவரது இயக்கத்துடன் நாம் தமிழர் தலைவர் சீமானும் இணைந்து செயல்படப் போவதாகவும் ஒரு தகவல் தெரிவித்தது. இருப்பினும் இதை நாம் தமிழர் அமைப்பு மறுத்துள்ளது. அது தவறான தகவல் என்று அந்த இயக்கம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications