பாகிஸ்தானில் 3 இந்துக்கள் சுட்டுக் கொலை: அமெரிக்கா கண்டனம்
வாஷிங்டன்: பாகிஸ்தானில் மூன்று இந்துக்கள் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்கா இது தொடர்பான விசாரணையை முடுக்கிவிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
பாகிஸ்தானில் சிறுபான்மையினத்தவருக்கு எதிராக நடைபெறும் வன்முறை சம்பவங்களை வன்மையாக கண்டிப்பதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
சிந்து மாகாணத்தின் சிகார்பூர் அருகில் உள்ள சாக் நகரின் மருத்துவமனை ஒன்றில், பணியில் இருந்த டாக்டர் உள்பட 3 இந்துக்கள் அடையாளம் தெரியாத கும்பலால் திங்கட்கிழமையன்று சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்த கொலை வெறித் தாக்குதலில் டாக்டர் அஜித் குமார், அவரது உறவினர்களும் தொழிலதிபர்களுமான நரேஷ்குமார் மற்றும் அசோக்குமார் ஆகியோர் கொல்லப்பட்டனர். மற்றொரு டாக்டரான சாதியா பால் படுகாயமடைந்தார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அமெரிக்கா, மத துவேஷத்துடன் செய்யப்படும் படுகொலை வன்மையாக கண்டிக்கின்றோம். சிறுபான்மையினத்தவருக்கு எதிராக நடைபெறும் எந்த ஒரு வன்முறைக்கும் அமெரிக்க ஆதரவு அளிக்காது. மனித உரிமைக்கு எதிரான இந்த செயலுக்கு சர்வதேச மத சுதந்திரம் சட்டத்தின்படி தண்டனை அளிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளது.
காலவரையற்ற வேலை நிறுத்தம்:
இதனிடையே சிந்து மாகாணத்தின் சிகார்பூர், லர்கானா, உமர்கோட், தர்பார்கர் மற்றும் நவாப்ஷா ஆகிய இடங்களில் வசிக்கும் இந்துக்கள் புதன்கிழமை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கொலைக்கு காரணமானவர்களை கைது செய்து தண்டனை அளிக்கும் வரை இந்த வேலை நிறுத்தம் தொடரும் என அறிவித்துள்ளனர். இதன் ஒரு பகுதியாக இப்பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications