விடாது பெய்த மழையிலும் நிரம்பாத 43 அணைகள்- தண்ணீரை சேமிக்க பொதுப்பணித்துறை கோரிக்கை
சென்னை: தமிழ்நாட்டில் பெய்த வடகிழக்கு பருவமழைக்கு 5 அணைகள் மட்டுமே நிரம்பி வழிகின்றன. இன்னும் 43 அணைகள் நிரம்பாமல் உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த அக்டோபர் மாதம் இறுதி வாரத்தில் தொடங்கிய பருவமழை 15 நாட்களுக்கும் மேலாக மாநிலம் வெளுத்து வாங்கியது. சென்னையில் சற்று ஓய்திருந்தாலும் தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் ஆங்காங்கே பெய்து வருகிறது. இந்த மழையினால் மாநிலம் முழுவதும் உள்ள அணைகளில் நீர்மட்டம் அதிகரித்தது.
இதில் சோலையாறு, ஆழியாறு, குண்டேறிப்பள்ளம், வரதமாநதி, வண்டல் ஓடை ஆகிய அணைகள் மட்டுமே முழு கொள்ளளவை எட்டியுள்ளன. இருப்பினும் 43 அணைகள் இன்னமும் முற்றிலும் நிரம்பவில்லை என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளன.
தமிழ்நாட்டில் சிறிதும், பெரிதுமாக 89 நீர்த்தேக்கங்கள் உள்ளன அவற்றில் பெரும்பாலான ஏரிகள் நிரம்பி வழிகின்றன. சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, செம்பரம்பாக்கம், புழல், சோழவரம் ஏரிகள் நிரம்பியுள்ளன. அந்த ஏரிகளில் இருந்து திறந்துவிடப்படும் உபரிநீர் வீணாக கடலில் கலக்கிறது.
தற்போது சென்னையில் மூன்று நாட்களாக மழை ஓய்ந்துள்ளதால் உபரிநீர் திறந்து விடப்படுவது குறைந்துள்ளது. கடந்த 2005-ம் ஆண்டு முதல் இந்த ஆண்டு வரை 10 டிஎம்சி தண்ணீர் வீணாகியுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புதிய நீர்த்தேக்கங்கள்
எனவே உபரிநீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்க மூன்று இடங்களில் புதிய நீர்த்தேக்கங்கள் கட்டப்படும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். அதன்படி, திருத்தணி அருகே பூண்டி நீர்த்தேக்கத்திற்கு மேல்பகுதியில் ராம்ஞ்சேரியிலும், தாமரைப்பாக்கம் அருகே பூண்டி நீர்த்தேக்கத்திற்கு கீழ்பகுதியில் திருக்கண்டலத்திலும், கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே 2 புதிய நீர்த்தேக்கங்கள் கட்டப்படுகின்றன.
அதேபோல் கும்மிடிப்பூண்டியில் இருந்து சத்தியவேடு செல்லும் வழியில் இருந்து தேர்வாய் கண்டிகை என்ற இடத்திலும் புதிய நீர்த்தேக்கம் கட்டப்படும் என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications