ஆப்கானிஸ்தான்: இளம் விதவைத் தாய், மகள் நடுத்தெருவில் கல்லால் அடித்து கொலை
காபூல்: ஆப்கானிஸ்தானின் கஸ்னி மாகாணத்தில் ஆயுதம் ஏந்திய 2 ஆண்கள் ஒரு இளம் விதவைத் தாயையும், அவரது மகளையும் நடுத்தெருவில் நிற்கவைத்து கல்லால் அடித்துக் கொலை செய்துள்ளனர்.
ஆப்கானிஸ்தான் பெண்களை தாலிபான்கள் தாக்கும் சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் கஸ்னி நகரின் க்வாஜா ஹக்கீம் பகுதியைச் சேர்ந்த இளம் விதவைத் தாயையும், அவரது மகளையும் ஆயுதம் ஏந்திய 2 ஆண்கள் கல்லால் அடித்தே கொலை செய்துள்ளனர். அந்த விதவைத் தாயும், மகளும் ஒழுக்கமில்லாமல் நடந்து கொண்டதாக குற்றம் சாட்டி கொன்றுள்ளனர்.
இரட்டைக் கொலை செய்ததற்காக 2 ஆண்களை கைது செய்துள்ளதாக ஆப்கானிஸ்தான் போலீசார் தெரிவித்தனர். இந்த கொடூரச் சம்பவத்திற்கு பின் தாலிபான்கள் இருப்பதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தார்கள் என்று பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.
இது குறித்து பாதுகாப்பு அதிகாரிகள் கூறியதாவது,
ஆயுதம் ஏந்தியவர்கள் விதவைத் தாயும், மகளும் வாழ்ந்த வீட்டிற்குள் நுழைந்தனர். அவர்கள் இருவரையும் தரத்தரவென்று தெருவுக்கு இழுத்து வந்தனர். அவர்களை நடுத்தெருவில் நிற்கவைத்து கல்லால் அடித்துக் கொன்றுள்ளனர் என்றார்கள்.
அக்கம்பக்கத்தினர் காப்பாற்றவும் வரவில்லை, போலீசாருக்கும் உரிய நேரத்தில் தகவல் கொடுக்கவில்லை என்று ஒரு அதிகாரி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications