ஒரு நாள் இன்பத்திற்காக கல்யாணம் பண்ணி பெண்ணைக் கைவிட்ட ஆட்டோ டிரைவர் கைது!
சென்னை: ஒரு நாள் இன்பத்திற்காக விவாகரத்து செய்த பெண்ணை ஏமாற்றி கல்யாணம் செய்து விட்டு காலையில் ஓடிப் போய் விட்ட ஆட்டோ டிரைவரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சென்னை அம்பத்தூர் ஓரகடம் சாலையில் வசித்து வருபவர் 38 வயது லூஸி. இவர் விவாகரத்து செய்து விட்ட இவர் தனியாக வசித்து வருகிறார். சூளை பகுதியைச் சேர்ந்தவர் காயவர்ணம். இவர் ஆட்டோ ஓட்டி வருகிறார். சமீபத்தில் லூஸி, கொரட்டூரில் உள்ள ஒரு திருமண தகவல் மையத்தை அணுகி அங்கு விவாகரத்தான இளைஞரை திருமணம் செய்ய வேண்டி விண்ணப்பம் கொடுத்து விட்டு வந்தார்.
இதைத் தெரிந்து கொண்ட காயவர்ணம், நேராக லூஸியைப் போய்ப் பார்த்தார்.நானும் விவாகரத்து செய்தவன்தான். நல்ல துணையைத் தேடி வருகிறேன். உங்களை மணக்க விரும்புகிறேன், நீங்கள் சம்மதித்தால் கல்யாணம் செய்து கொள்ளலாம் என்று கூறியுள்ளார். இதைக் கேட்டதும் நெகிழ்ந்து போன லூஸி, உடனே சம்மதம் தெரிவித்தார்.
இதையடுத்து வில்லிவாக்கத்தில் உள்ள ஒரு கோவிலுக்குப் போய் இருவரும் மாலை மாற்றிக் கல்யாணம் செய்து கொண்டனர். பின்னர் அன்றே முதலிரவை வைத்துக் கொள்ளலாம் என்று காயவர்ணம் கூற, அதை லூஸியும் ஏற்றார். இதையடுத்து அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்கு லூஸியை அழைத்துச் சென்றார் காயவர்ணம். அது அவரது உறவினர் வீடாகும்.
அங்கு வைத்து இருவரும் முதலிரவை நடத்தியுள்ளனர். சந்தோஷமாக வாழ்க்கையைத் தொடங்குகிறோம் என்ற மகிழ்ச்சியில் தூங்கிப் போனார் லூஸி. ஆனால் காலையில் எழுந்து பார்த்தால் காயவர்ணம் மாயமாகியிருந்தார். அதிகாலையிலேயே எழுந்து வீட்டை விட்டு ஓடிப் போய் விட்டார் காயவர்ணம். இதை அறிந்த லூஸி பெரும் அதிர்ச்சி அடைந்தார். காயவர்ணத்திடம் விசாரித்தபோது அவர் காலையிலேயே போய் விட்டதாக தெரிய வந்தது.
அவரது செல்போனுக்குத் தொடர்பு கொண்டபோது அது ஆப் செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார் லூஸி.
இதையடுத்து வலைவீசி தேடிய போலீஸார் காயவர்ணத்தை செவ்வாய்ப்பேட்டையில் வைத்துப் பிடித்தனர். அவரிடம் விசாரித்தபோது, லூஸியுடன் உல்லாசமாக இருக்கவே அவரை மணப்பது போல நடித்தேன் என்று கூறியுள்ளார் காயவர்ணம். இதையடுத்து அவரைப் போலீஸார் கைது செய்து கோர்ட்டில் நிறுத்தி சிறையில் அடைத்தனர்.