கூடங்குளம்- மக்கள் மனதில் நம்பிக்கையை விதைக்க அரசு அடம் பிடிப்பது ஏன்?
நெல்லை: கூடங்குளம் அணுமின் நிலைய திட்டத்தை எதிர்த்து கடலோர கிராம மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு முக்கியக் காரணம் மக்கள் மனதில் நிலவும் கதிர்வீச்சு மற்றும் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுமோ என்ற அச்சம்தான். இதை துடைத்து மக்கள் மனதில் நம்பிக்கையை விதைக்க மத்தியஅரசு பிடிவாதமாக இருப்பது ஏன் என்று புரியவில்லை.
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் அணுமின் நிலையம் அமைக்க கட்டுமானப் பணிகள் கடந்த 2001ம் ஆண்டு துவக்கப்பட்டது. இதன் மூலம் 8,000 மெகா வாட் மின்சாரம் கிடைக்கும் எனவும், அதில் 50 சதவீதம் தமிழக தேவைக்காக வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
ஆரம்பத்தில் சிறு சிறு எதிர்ப்புகள் இருந்தாலும் அவை ஆட்சியாளர்களால் கண்டு கொள்ளப்படவில்லை. தற்போது கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடக்கோரி 30 கிராம மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். 2ம் கட்ட போராட்டமும் தொடர்ந்து நடந்து வரும் நிலையில் கடலோர கிராம மக்கள் அனைவரும் இப்போராட்டத்தி்ற்கு உறுதுணையாக உள்ளனர்.
இடிந்தகரையில் துவங்கி பாம்பன் வரையிலும் மீனவ மக்கள் கூடங்குளம் அணுமின் நிலைய திட்டத்தை எதிர்ப்பதில் விடாப்பிடியாக உள்ளனர். மீனவ கிராமங்கள் தொடர்ந்து அணுமின் நிலையத்தை எதிர்ப்பதற்கு வேறு காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. அணுமின் நிலைய கழிவுகளால் கடல் மற்றும் மீன்வளம் பாதிக்கப்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே தங்கள் வாழ்வாதாரமான மீன்பிடி தொழில் பாதித்துவிடுமோ என்ற அச்சம் மீனவர்கள் மத்தியில் நாளுக்கு நாள் பெருகி வருகிறது. மனித உயிருக்கே அணுமின் நிலையம் ஆபத்து விளைவிக்கும் என்ற அச்சமும் அனைத்து கிராமங்களிலும் உள்ளது.
அணுமின் நிலையங்களை பொறுத்தவரை ஒவ்வொரு கட்டத்திலும் கதிர்வீச்சு ஏற்படுவதை தவிர்க்க இயலாது. மண்ணில் கலக்கும் இந்த கதிர்வீச்சுகள் எப்போது வேண்டுமானாலும் மனித குலத்துக்கு ஆபத்தை உருவாக்கலாம். மேலும் யுரேனியம் மூலம் தயாரிக்கப்படும் புளூட்டோனியத்தை ராணுவ அணு ஆயுதங்களுக்கு பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது.
நாட்டின் பாதுகாப்பு அம்சங்கள் கருதி இத்தகைய புளூட்டோனியம் தேவை என்றாலும், ராணுவம் மீதும், மத்திய பாதுகாப்பு படைகள் மீதும் மீனவ கிராம மக்களுக்கு இதுநாள் வரை நம்பிக்கை வரவில்லை. இதை வளர விடாமல் அந்த மக்கள் மத்தியில் நம்பிக்கையை விதைக்க வேண்டியது அரசின் கடமையாகும்.












Click it and Unblock the Notifications