'எலைட்' மதுக் கடைகள், பார்கள் அமைக்க சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு

தமிழக அரசின் வருவாயை பெருக்க மாநிலம் முழுவதும் 55 எலைட் ஷாப்கள் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இங்கு உயர்ரக மது வகைகள் மட்டுமே வி்ற்பனை செய்யப்படும்.
தமிழகத்தில் கடந்த 2003ம் ஆண்டு நவம்பரில் டாஸ்மாக் நிர்வாகத்தின் கீழ் 6500 மதுக் கடைகள் திறக்கப்பட்டன. இதில் வேலை வாய்ப்பு அலுவலகங்கள் மூலம் தேர்வு செய்யப்பட்ட 35 ஆயிரம் பேர் பணியாற்றி வருகின்றனர். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் தனியாருக்கு மதுகடைகள் ஏலம் விடப்பட்டு ஆண்டுக்கு ஆயிரம் கோடி முதல் 2 ஆயிரம் கோடி வரை அரசுக்கு வருமானம் கிடைத்தது. அதன் பிறகு 2003ம் ஆண்டு முதல் அரசு கட்டுபாட்டின் கீழ் மதுக்கடைகள் செயல்பட்டதால் ஒவ்வொரு ஆண்டும் கூடுதலாக ரூ.1500 கோடி லாபம் கிடைத்தது.
2004-2005ல் ஆண்டு வருமானம் 6 ஆயிரம் கோடி கிடைத்த நிலையில் 2010-2011 ஆண்டில் 14 ஆயிரம் கோடியை எட்டியது. இந்த வருவாய் மூலம் அரசின் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதே நேரத்தில் அரசின் அனைத்து துறையின் கீழ் வரக்கூடிய வருவாயில் டாஸ்மாக் மூலம் வரக்கூடிய வருவாய் 15 முதல் 20 சதவீதம் ஆகும். தற்போது தமிழக அரசின் நிதி பற்றாக்குறையை கருத்தில் கொண்டு பல்வேறு பணிகள் செய்ய முடியாமல் அரசு திணறி வருகிறது.
இதை தொடர்ந்து மதுவகைகள் விற்பனையில் அதிக வருவாய் கிடைப்பதால் கூடுதல் மதுகடைகள் திறக்க அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி தமிழகம் முழுவதும் 55 எலைட் ஷாப் டாஸ்மாக் கடைகள் திறந்திட ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
முதற்கட்டமாக சென்னையில் 8, கோவை 16, மதுரை 12, சேலம் 9, திருச்சி 12 என 5 மண்டலங்களில் மொத்தம் 55 கடைகள் திறக்கப்பட உள்ளன.
இதுகுறித்து மதுரை மண்டல மேலாளர் ராகவன் கூறும்போது தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூலம் அதிக வருவாய் கிடைத்து வருவதால் எலைட் ஷாப்கள் திறக்க அரசு முடிவு செய்துள்ளது.
அதன்படி மதுரை மண்டலத்தில் புதிதாக திறக்க உள்ள 12 கடைகளில் தென்மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் 1 கடையும், மதுரையில் 4 கடைகளும் திறக்கப்பட உள்ளன என்றார்.
இதற்கிடையே, இந்த எலைட் மது பானக் கடைகளுக்கு சமூக ஆர்வலர்கள் கடும் அதிருப்தியும், எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர். தமிழக மக்களை பெரும் குடிகாரர்களாக மாற்றும் திட்டம் இது. தமிழக மக்களுக்கு பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. அதைத் தீர்க்க முயலாமல் இப்படி மதுக் கடைகளின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொண்டே போவது சரியல்ல என்று அவர்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications