நிருபர்களுக்கு 10 மணி நேரம் கூடங்குளம் அணு மின் நிலையத்தை சுற்றிக் காட்டிய மத்திய அரசு
திருச்செந்தூர் : பத்திரிக்கையாளர்களை திடீரென அழைத்த மத்திய அரசு அவர்களுக்கு கிட்டத்தட்ட 10 மணி நேரம் கூடங்குளம் அணு மின் நிலையத்தை சுறறிக் காட்டி விளக்கியது.
கூடங்குளம் அணு மின் நிலையம் பாதுகாப்பு சம்பந்தமாக இடிந்தகரையில் பொதுமக்கள் போராட்டத்தில் ஆரம்பித்து உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். இந்த நிலையில், கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு பத்திரிக்கையாளர்கள் குழுவை நேற்று மத்திய அரசு அழைத்துச் சென்று சுற்றிக் காண்பித்தது.
கூடங்குளம் அணு மின் நிலையத்தில் 99 சதவீத பணிகள் முடிந்து விட்டது. 2வது அணு உலை பணிகள் 95 சதவிதம் முடிந்து விட்டது. இது தவிர இன்னும் 2 அணு உலைகள் அமைக்கப்படும். மொத்தம் 5 ஆயிரம் மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இங்கு உற்பத்தியாகும் மின்சாரத்தில் 2 ஆயிரம் மெகா வாட் மின்சாரம் தமிழகத்துக்கு கிடைக்கும். இந்நிலையில் கூடங்குளத்தில் அமைந்துள்ள அணு உலையை சுற்றி கட்டுவதற்கும், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விளக்குவதற்கும் அணு உலை நிர்வாகம் சார்பில் பத்திரிக்கையாளர்களுக்கு மட்டும் அழைப்பு அனுப்பி நேற்று காலை அவர்களை அழைத்து அணு உலை வசதிகளை சுற்றி காட்டி உள்ளனர்.
வரும் 15, 16, 17 ஆகிய 3 தினங்களில் மத்திய, மாநில அரசு ஆய்வுக்குழுவினர் அணு உலையை ஆய்வு செய்ய உள்ளதால் முன்னாதாகவே பத்திரிக்கையாளர்களை அங்கு தனியாக அழைத்து சென்று சுற்றிக் காட்டி அணு உலை நிர்வாகம் புகைப்படங்கள் மற்றும் பாதுகாப்பு குறித்து அனைத்து குறிப்புகளையும் கொடுத்துள்ளனர்.
சுமார் 10 மணி நேரம் பத்திரிக்கையாளர்களை அங்கு அழைத்து சென்று விளக்கம் அளித்து அனைவரையும் நெல்லைக்கு கூட்டி வந்து விட்டுள்ளனர். ஆனால் தங்களுக்குச் சாதகமான மீடியாக்களை மட்டும் அழைத்துச் சென்று சுற்றிக் காண்பித்ததாக ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ரஷ்ய விஞ்ஞானிகள் கூடங்குளத்தை விட்டு வெளியேளவில்லை -காசிநாத் பாலாஜி
இதற்கிடையே, கூடங்குளம் அணுமின் நிலையத்தில் விரைவில் மின் உற்பத்தி துவங்கும் என தான் நம்புவதாக, அணுமின் நிலைய இயக்குநர் காசிநாத் பாலாஜி தெரிவித்தார்.
அணு மின் நிலையத்தை நிருபர்களுக்கு சுற்றிக் காட்டிய பின்னர் காசிநாத் பாலாஜி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில்,
அணுமின் உலை, மின் உற்பத்திக்கு தயாராக இருப்பதாகவும், போராட்டம் காரணமாக மின் உற்பத்தி தாமதமாகியுள்ளதாகவும், சுமூக சூழ்நிலை ஏற்படும்பட்சத்தில், விரைவில் மின் உற்பத்தி துவங்கும். ரஷ்ய விஞ்ஞானிகள் யாரும் கூடங்குளத்தை விட்டு வெளியே செல்லவில்லை. அவர்கள் அனைவரும் கூடங்குளத்திலேயே இருப்பதாகவும், ஆயிரம் பேர் வேலை பார்த்ததில், தற்போது 90 பேர் மட்டும், அத்தியாவசிய பராமரிப்பு பணிகளை செய்து வருவதாக காசிநாத் பாலாஜி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications