கூடங்குளம் விவகாரத்தில் அரசியல், மத தலைவர்கள் தலையிடாதீங்க: நாராயணசாமி
சென்னை: கூடங்குளம் பிரச்சனையில் அரசியல் மற்றும் மதத் தலைவர்கள் தலையிடாமல் இருப்பது நல்லது என்று மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை, நேவநேயப் பாவாணர் அரங்கில் 'இந்தியாவின் வளர்ச்சிக்கு அணு மின்சக்தி' என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கிற்கு மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி தலைமை தாங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது,
நிலக்கரி, காற்றாலை, நீர்வீழ்ச்சி மூலமாக மட்டும் இந்தியாவின் மின் தேவையை பூர்த்தி செய்துவிட முடியாது. அதற்கு அணுசக்தி மின்சாரமும் தேவை. தமிழகத்தில் நான் சென்ற இடங்களில் நகரங்களில் 6 மணி நேரமும், கிராமங்களில் 8 மணி நேரமும் மின்வெட்டு ஏற்படுகிறது.
இந்தியாவில் 20 அணுமின் உலைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதன் மூலம் 3,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த அளவை அதிகரிக்க மத்திய அரசு திட்டமிடுகிறது.
வரும் 2015ம் ஆண்டிற்குள் அணுமின் நிலையங்கள் மூலம் 45,000 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய சீனா தீர்மானித்துள்ளது. பாகிஸ்தானிலும் கூட 2,000 மெகாவாட் திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கும் பணி நடந்து கொண்டிருக்கிறது. அப்படி இருக்கையில் தமிழகத்தில் மட்டும் ஏன் அணுமின் நிலையம் வேண்டாம் என்கிறார்கள்.
கடந்த 1997ம் ஆண்டில் கூடங்குளத்தில் அணுமின் நிலையம் அமைக்கத் திட்டமிடப்பட்டு 2003ம் ஆண்டு துங்கப்பட்டது. தற்போது 2 அணு உலைகளின் கட்டுமானப் பணிகள் நிறைவடையும் நிலையில் இருக்கிறது. அந்த பணிகள் முடிந்து உலைகள் செயல்படத் துவங்கினால் 2,000 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும். அதில் தமிழகத்திற்கு மட்டும் 960 மெகாவாட் கிடைக்கும். அதற்குள் அணுமின் நிலையத்தால் ஆபத்து என்று கூறி போராடி பணிகளை தடுக்கப் பார்க்கின்றனர்.
கூடங்குளம் அணுமின் நிலையத்தின் பாதுகாப்பு குறித்து மத்திய, மாநில அரசுகளின் குழுக்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. போராட்டக்காரர்கள் கேட்ட 6 கேள்விகளுக்கான பதில் தயாரிக்கும் பணியில் மத்திய அரசு குழு ஈடுபட்டுள்ளது.
பேச்சுவார்த்தை நடக்கையில் போராட்டம் தேவையா? 2020க்குள் 2.5 லட்சம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய இந்தியா திட்டமிட்டுள்ளது. அந்த இலக்கை அடைய ராஜஸ்தான், அரியானா, மகாராஷ்டிராவில் அணு உலைகள் அமைக்கப்படவிருக்கின்றன. அற்கான இடத் தேர்வு நடந்து கொண்டிருக்கிறது. உத்தர பிரதேசமும், மத்திய பிரதேசமும் தங்கள் மாநிலங்களில் அணு உலைகள் அமைக்குமாறு கோருகின்றன.
இத்தனை அணு உலைகள் அமைத்தால் இந்தியா சீனாவை மிஞ்சிய வளர்ச்சியடையும். ஆகையால் போராட்டம் என்ற பெயரில் மக்களை திசை திருப்பாதீர்கள். இந்த பிரச்சனையில் அரசியல், மத தலைவர்கள் தலையிட வேண்டாம். இந்த விவகாரத்தில் மாநில அரசு மத்திய அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறது என்றார்.












Click it and Unblock the Notifications