தமிழ்நாட்டில் குறைந்தது மழை- மாலை முதல் காலை வரை வதைக்கும் பனி
சென்னை : கடந்த வாரம் வரை வெளுத்து வாங்கிய வடகிழக்கு பருவமழை தற்போது ஓய்வெடுக்கத் தொடங்கியுள்ளதால் இரவு நேரங்களில் பனி பெய்ய ஆரம்பித்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கடும் பனியால் தேயிலைகள் கருகியுள்ளன.
தமிழ்நாட்டில் அக்டோபர் இறுதி வாரத்தில் தொடங்கிய வடகிழக்குப் பருவமழை நவம்பர் முதல்வாரம் வரை வெளுத்து வாங்கியது. இதனால் மாநிலம் முழுவதும் பல்வேறு அணைகள், நீர்த்த்தேக்கங்கள், ஏரிகள் நிரம்பி வழிகின்றன. தொடக்கத்திலேயே 70 சதவிகித அளவிற்கு மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த ஒரு வாரகாலமாக மழை ஓய்ந்து வெயில் அடிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் தாழ்வான பகுதிகளில் தேங்கியிருந்த வெள்ளநீர் வடியத் தொடங்கியுள்ளது. மாலை நேரங்களிலேயே குளிர் தொடங்கி இரவு முழுவதும் பனியாக கொட்டுகிறது. இந்த சீதோஸ்ண மாற்றத்தினால் ஏராளமானேர் நோய் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர். மருத்துவமனைகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது. பனிக்காலம் தொடங்கியுள்ளதால் கம்பளி, பனிக்குல்லா போன்றவற்றின் விற்பனை அதிகரித்துள்ளது.
நீலகிரியில் கருகும் தேயிலை
நீலகிரி மாவட்டத்தில் கடந்த 7 ஆம் தேதி வரை பருவமழை பெய்தது. மழை நின்ற மறுநாள் முதல் பனிப்பொழிவு கடுமையாக இருப்பதால் குன்னூர் உள்ளிட்ட இடங்களில் தேயிலைச்செடிகள் கருகிவருகின்றன. இதனால் அதிக நஷ்டம் ஏற்படும் என்று விவசாயிகள் கருத்து தெரிவித்துள்ளனர். பனியின் தாக்கம் மேலும் தீவிரமடையும் பட்சத்தில் மகசூல் மேலும் குறைய வாய்ப்புள்ளதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
பனிக்கான காரணம் என்ன?
மார்கழிமாதம்தான் பனிக்காலம் தொடங்கும். ஆனால் வழக்கத்திற்கு மாறாக ஐப்பசி மாதத்திலேயே பனி பெய்து வருவதால் மழை இனி இருக்காதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன், வானத்தில் மேகக் கூட்டம் இல்லாததால் வானம் தெளிவாக உள்ளது. எனவே வானம் தெளிவாக இருந்தாலே குளிர் அதிகமாக இருக்கும் என்றார்.
வளிமண்டலத்தில் உள்ள ஈரம் காரணமாகவே அதிக தூரம் பார்க்க முடியாத நிலை உள்ளதாகவும் அவர் கூறினார். மேலும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மேலும் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் என்றும் ரமணன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications