வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
வேலூர்: வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் கட்டுவாச்சாரி பகுதியில் உள்ளது. இந்த அலுவலகத்திற்கு நேற்று மாலை ஒரு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. எடுத்துப் பேசியபோது 5.10 மணியளவில் சக்திவாய்ந்த வெடிகுண்டு வெடிக்கும் என்று மர்ம நபர் ஒருவர் மிரட்டல் விடுத்துவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார். இந்த தகவல் கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் இருந்தவர்கள் அலறி அடித்து ஓடினர்.
இது குறித்து வேலூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்திற்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு விரைந்து வந்து மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்தினர். சோதனையில் வெடிகுண்டு எதுவும் இல்லை, அந்த மிரட்டல் வெறும் புரளி என தெரிய வந்தது.
இந்த சம்பவம் குறித்து கட்டுவாச்சாரி பகுதி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.