திருமண கோஷ்டியினர் சென்ற கார் மோதியதில் அண்ணன், தங்கை உட்பட 3 பேர் பலி
ஓசூர்: பள்ளி முடிந்து வீடு திரும்பிய 3 பள்ளி குழந்தைகள் மீது திருமண குழுவினரின் கார் மோதியதில் அண்ணன், தங்கை சம்பவ இடத்திலேயே பலியாகினர். காரில் இருந்த ஒரு நபர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பலியானார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரை அடுத்த பீர்ஜேப்பள்ளியை சேர்ந்தவர் சசிகலா(20). இன்று இவருக்கு காந்தி என்பவருடன் ஆந்திராவில் திருமணம் நடப்பதாக இருந்தது. இதற்காக நேற்று மாலையில் மணப்பெண் வீட்டார் ஒரு வேன் மற்றும் காரில் ஆந்திராவுக்கு புறப்பட்டு சென்றனர். கார் ஓட்டுநர் மஞ்சு(25) உட்பட காரில் மொத்தம் 11 பேர் பயணித்தனர்.
ஓசூரை அடுத்த தானமாவு பகுதியில் உள்ள ஒரு வளைவில் கார் திரும்பியது. அப்போது சாலையோரமாக நடந்து சென்ற ராஜப்பா என்பவரின் குழந்தைகள் மாதேஷ்(11), ராஜேஸ்வரி(7) மற்றும் அதே பகுதியை சேர்ந்த சாம்ராஜ் மகன் நாகேஷ்(8) ஆகியோர் மீது கார் மோதியது. இதன்பிறகு அருகில் உள்ள புளியமரத்தில் மோதி, தலைக்கீழாக கவிழ்ந்தது.
இந்த விபத்தில் பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாதேஷ், ராஜேஸ்வரி ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மாதேஷ் உடன் சாலையில் நடந்து சென்ற நாகேஷ் மற்றும் மணப்பெண் சசிகலா உட்பட 12 பேரும் காயமடைந்து, ஓசூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். காரில் பயணித்து காயமடைந்த சிவக்குமார்(22) என்பவர் மேல் சிகிச்சைக்காக பெங்களூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
இது குறித்து உத்தனப்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications