பென்ஷன் பண்ட்களில் 26% அன்னிய முதலீட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல்

நேரடி அன்னிய முதலீட்டுக்கு வழிசெய்யும், பென்ஷன் நிதி ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணைய மசோதா (Pension Fund Regulatory and Development Authority Bill 2011) கடந்த மார்ச் மாதமே நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.
பின்னர் நிதி அமைச்சகத்துக்கான நாடாளுமன்ற நிலைக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பட்டது. இந் நிலையில் வரும் 22ம் தேதி கூடும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரிலேயே இந்த மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இப்போது பிராவிடண்ட் பண்ட் எனப்படும் வருங்கால வைப்பு நிதியில் இணைந்துள்ள அரசு, தனியார் துறை ஊழியர்களுக்கு அவர்களது பி.எப் பணத்துக்கு 9.5% வட்டி தரப்பட்டு வருகிறது. இந்த வட்டி விகிதத்தை மத்திய அரசு நிர்ணயித்து வருகிறது.
அதே போல தனியார் பென்ஷன் பண்ட்களில் அவர்களே வட்டி விகிதத்தை நிர்ணயித்து வருகின்றனர்.
இந் நிலையில், இந்தத் துறையில் தனியார் முதலீடு வந்தால் வட்டி குறையலாம் என்ற அச்சமும் உள்ளது. இதனால் இந்த மசோதாவை இடதுசாரிகள் உள்ளிட்ட தொழிலாளர் சங்கங்கள் எதிர்த்து வருகின்றன.
இந்த நிலையில் இந்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் தந்துள்ளது. மசோதா குறித்து மூத்த அதிகாரியொருவர் கூறுகையில், இன்சூரன்ஸ் துறையில் இருப்பது போலவே ஓய்வூதியத் துறையிலும் நேரடி அன்னிய முதலீடு 26 சதவீதமாக இருக்க வேண்டுமென மத்திய அரசு கருதுகிறது. ஆனாலும், இந்த 26 சதவீதம் என்ற அளவை சூழ்நிலைகளுக்கு ஏற்ப அவ்வப்போது மாற்றவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
ஓய்வூதியத் திட்டத்தில் இணைந்துள்ள ஓய்வூதியதாரர்களுக்கு திட்டவட்டமாக எவ்வளவு பலன் கிடைக்கும் என்ற விவரம் மசோதாவில் இடம் பெறாது.
அதே நேரத்தில் பென்ஷன் நிதியிலிருந்து முதிர்வு தேதிக்கு முன்னதாகவே ஓய்வூதியதாரர்கள் பணம் திரும்பப் பெறுவதை அரசு கட்டுப்படுத்தவுள்ளது. நியாயமான காரணங்களுக்காக மட்டுமே பணம் எடுக்க அனுமதிக்கப்படும். சிறு காரணங்களுக்காக பணத்தைத் திரும்பப் பெறுவது அனுமதிக்கப்படாது என்றார்.
முன்னதாக இந்த மசோதாவை பரிசீலித்த, பாஜக தலைவர் யஷ்வந்த் சின்ஹ தலைமையிலான நிதி அமைச்சகத்துக்கான நாடாளுமன்ற நிலைக் குழு சில முக்கிய பரிந்துரைகளை முன் வைத்தது. அதில் முக்கியமானது, ஓய்வூதியதாரர்களுக்கு குறைந்தபட்ச பலன் (வட்டி விகிதம்) எவ்வளவு கிடைக்கும் என்பதை மசோதாவிலேயே குறிப்பிட வேண்டும் என்று கோரியிருந்தது.
ஆனால், அந்த பரிந்துரையை அரசு அதை ஏற்கவில்லை.
மேலும் பி.எப். நிதியிலிருந்து பணி ரிடையர்மெண்ட்டுக்கு முன்னதாகவே பணத்தை எடுத்துக் கொள்ள இப்போது ஊழியர்களுக்கு அனுமதி உள்ளது. இதை கட்டுப்படுத்தக் கூடாது என்றும் யஷ்வந்த் சின்ஹா பரிந்துரை செய்திருந்தார். ஆனால், அதையும் மத்திய அமைச்சரவை ஏற்கவில்லை.
(பணத்தை எடுக்க அனுமதிப்பதை இந்தத் துறையில் முதலீடு செய்யும் அன்னிய நிறுவனங்கள் எதிர்க்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், பணம் எடுக்க தொழிலாளர்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது இந்த மசோதா)
ஓய்வூதியதாரர்களுக்கு திட்டவட்டமாக எவ்வளவு வட்டி கிடைக்கும் என்பதை அறிவிக்காத வரை, இந்தத் துறையில் அன்னிய முதலீடு என்பது இந்தத் திட்டத்தில் சேர்ந்துள்ள கோடிக்கணக்கான ஊழியர்களுக்கு பெரிய பலனை அளிக்குமா என்பது சந்தேகமே.
மேலும் ஓய்வூதியத் துறையில் அனுமதிக்கப்படும் அன்னிய முதலீட்டை எவ்வாறு பயன்படுத்தலாம் என்ற விவரத்தையும் மத்திய அரசு சொல்லவில்லை.












Click it and Unblock the Notifications