சிஏஜி, பிஏசிக்கு பிரணாப் ஆதரவு.. பிரணாபுக்கு ஜோஷி ஆதரவு!
டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் மத்தியத் தலைமைக் கணக்கு அதிகாரி மற்றும் நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழுவுக்கு ஆதரவாகப் பேசியதற்காக மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கு நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழுத் தலைவரும் பாஜக மூத்த தலைவருமான முரளி மனோகர் ஜோஷி நன்றி தெரிவித்துக் கொண்டார்.
மத்திய தலைமைக் கணக்குத்துறையின சிஏஜி அமைப்பின் 150வது ஆண்டுவிழா டெல்லியில் நடந்தது. அதில் பிரணாப் முகர்ஜி, முரளி மனோகர் ஜோஷி, தற்போதைய சிஏஜி வினோத் ராய் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் முரளி மனோகர் ஜோஷி பேசுகையில், நாட்டின் ஜனநாயக அமைப்புகள் தொடர்ந்து பலமுறை தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கின்றன. ஆனால், பல ஊழல் வழக்குகள் இந்த அமைப்புகள் மூலமாகவே அம்பலமாகியிருக்கின்றன.
சமீபத்தில் வியட்நாமின் ஹனோய் நகரில் நடந்த ஆசிய வளர்ச்சி வங்கியின் ஆண்டுக் கூட்டத்தில், சிஏஜி, நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழு ஆகியவற்றை பிரணாப் முகர்ஜி புகழ்ந்து பேசியது பாராட்டுக்குரியது. இது போன்ற அமைப்புகள் காரணமாகவே, இந்திய அரசு நிர்வாகம் வலுவாகவும் வெளிப்படையாகவும் இருப்பதாக முகர்ஜி கூறினார்.
இதுபோன்ற கருத்துகள் இந்த அமைப்புகள் மீதான நம்பிக்கையை மேலும் அதிகரிக்க உதவும். பிரணாப் முகர்ஜி தனது ஆதரவை தொடர்ந்து பிஏசி, சிஏஜி போன்ற அமைப்புகளுக்கு வழங்க வேண்டும்.
சமீபத்தில் சிஏஜியை ஊடகங்களில் ஒரு பிரிவினரும், அரசியல்வாதிகளும் கடுமையாக விமர்சித்தனர். இது தவறானது. சிஏஜியையும் அவருக்குக் கீழ் பணியாற்றும் அதிகாரிகளையும் மதிக்க வேண்டிய நமது நாடாளுமன்ற உறுப்பினர்களே, சிஏஜியின் நியாயமான வெளிப்படையான கருத்துகளை ஏற்கத் தயங்குகின்றனர். மத்திய அமைச்சர்களே தரம் தாழ்ந்து விமர்சிக்கின்றனர். இது துரதிஷ்டவசமானது என்றார்.
இக் கூட்டத்தில் பிரணாப் முகர்ஜி பேசுகையில், சிஏஜி அமைப்புக்கு மேலும் அதிகாரங்களை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக சிஏஜி சட்ட விதிகளில் திருத்தம் கொண்டு வருவது குறித்து பரிசீலித்து வருகிறோம் என்றார்.












Click it and Unblock the Notifications