சாட்சிகளை நெருக்குகிறது சிபிஐ: ரிலையன்ஸ், ஸ்வான் டெலிகாம் அதிகாரிகள் புகார்
டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் நெருக்கடி கொடுத்து வாக்குமூலங்களை வாங்குவதாகவும், நாங்கள் சொல்லிக் கொடுப்பது போலவே நீதிமன்றத்தில் பேச வேண்டும் என்று மிரட்டுதிவதாகவும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களில் ஒருவரான ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தின் இயக்குனர் வினோத் கோயங்கா டெல்லி பாட்டியாலா சிபிஐ நீதிமன்றத்தில் புகார் தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த வழக்கில் சாட்சிகள் விசாரணை நீதிபதி ஓ.பி.சைனி முன்னிலையில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் சிபிஐ நடந்து கொள்ளும் முறை குறித்து சாட்சிகளில் ஒருவரான அனில் அம்பானி குழுமத்தின் ரிலையன்ஸ் டெலிகாம் அதிகாரியான சேதுராமனும் நீதிபதியிடம் புகார் கூறியுள்ளார்.
சிபிஐ தரப்பு சாட்சியாக சேர்க்கப்பட்ட இவர் நீதிமன்றத்தில் கூறுகையில், இந்த சாட்சி விசாரணை ஆரம்பிப்பதற்கு இரண்டு நாட்கள் முன்னதாக என்னை தங்களது அலுவலகத்துக்கு வரவழைத்தது சிபிஐ. அங்கு வைத்து, இது தான் உங்களது ஸ்டேட்மெண்ட். இதில் கையெழுத்து போடுங்கள் என்றனர்.
ஆனால், அதில் உள்ள விவரங்கள் பலவற்றை நான் ஏற்கவில்லை, குறிப்பாக எங்களது நிறுவனத்தைச் சேர்ந்த ஹரி நாயரின் (இவரும் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளார்) கையெழுத்துத் தொடர்பாக சிபிஐ பதிவு செய்த விவரங்களை நான் ஏற்கவில்லை.
ஒரு ஆவணத்தில் இருந்தது ஹரி நாயரின் கையெழுத்து தான் என்று நான் உறுதிப்படுத்தியதாக சிபிஐ கூறியுள்ளது. ஆனால், நான் உண்மையில் சொன்னது என்னவென்றால், அது ஹரி நாயரின் கையெழுத்தாக இருக்கலாம் என்பது தான். அதை திரித்து நான் அதை நாயரின் கையெழுத்து என்று உறுதிப்படுத்தியாக எழுதி வைத்துக் கொண்டு அதில் என் கையெழுத்தைக் கேட்டனர் என்று குற்றம் சாட்டினார்.
இந் நிலையில், இந்த விவகாரத்தில் நெருக்கடி கொடுத்து வாக்குமூலங்களை வாங்குவதாக வினோத் கோயங்காவும் புகார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து நீதிபதியிடம் புகார் தெரிவித்த குற்றம் சாட்டப்பட்டவர்களின் வழக்கறிஞர்கள், இப்படித்தான் பேச வேண்டும், எழுத வேண்டும் என சாட்சிகளை சிபிஐ நெருக்குகிறது. மேலும் அதிகாரப்பூர்வமாக இல்லாமல், சாட்சிகளை தங்களது அலுவலகத்துக்கு சிபிஐ வரவழைத்து வருகிறது. சம்மன் அனுப்பாமல், திடீரென வரவழைத்து நெருக்கடி தருகிறது. சிபிஐயின் இந்தச் செயல்களை தடுக்க வேண்டும் என்றனர்.
இதையடுத்து இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு வரும் 23ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு சிபிஐக்கு நீதிபதி சைனி உத்தரவிட்டார்.
2ஜி ஸ்பெக்ட்ரம் பெற தகுதியில்லாத ஸ்வான் டெலிகாமின் சொத்துக்களை உயர்த்திக் காட்டுவதற்காக ரிலையன்ஸ் டெலிகாம் தனது நிதியை அந்த நிறுவனத்துக்கு திருப்பி விட்டது, ஸ்வான் டெலிகாமை முன் நிறுத்தி 2ஜி ஸ்பெக்ட்ரத்தை முறைகேடாக பெற ரிலையன்ஸ் முயன்றது என்பது தான் குற்றச்சாட்டாகும்.












Click it and Unblock the Notifications