எகிப்தில் வேகமாகப் பரவும் போராட்டம்- பலி எண்ணிக்கை 33 ஆக உயர்வு
கெய்ரோ : எகிப்து நாட்டில் ராணுவத்தினருக்கு எதிரான போராட்டம் வலுவடைந்து வருகிறது. தக்ரீர் சதுக்கத்தில் திரண்டு இருந்த போராட்டக்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இதுவரை 33 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
30 ஆண்டுகாலம் எகிப்து நாட்டை ஆட்டிப் படைத்து வந்த ஹோஸ்னி முபாரக் பதவி விலக வலியுறுத்தி கடந்த பிப்ரவரி மாதம் அங்கு மக்கள் புரட்சியில் ஈடுபட்டனர். சுதந்திர சதுக்கத்தில் குழுமி மக்கள் நடத்திய போராட்டத்துக்கு ராணுவமும் மறைமுக ஆதரவு அளித்தது. இதையடுத்து முபாரக் பதவியை விட்டு வெளியேறினார். அதன் பின்னர் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது.
முறைப்படி தேர்தல் நடத்துவோம் என்று அது கூறிய நிலையிலும், இன்னும் அது ஆட்சி நிர்வாகத்திலிருந்து அகலாமல் உள்ளது.
ராணுவத்திற்கு எதிராக போராட்டம்
இதையடுத்து தற்போது ராணுவம் ஆட்சிப் பொறுப்பிலிருந்து விலக வேண்டும் என்று கோரிமக்கள் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். சுதந்திர சதுக்கத்தில் திரண்ட அவர்கள் அங்கிருந்தபடி போராட்டத்தை நடத்தி வருகின்றனர். கடந்த 2 நாட்களாக நடந்து வரும் போராட்டம் தற்போது வன்முறையாக மாறியுள்ளது.
போராட்டம் நடத்த திரண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்களை அங்கிருந்து விலகிச்செல்லுமாறு போலீஸாரும், ராணுவத்தினரும் உத்தரவிட்டனர். ஆனால் அவர்கள் அகல மறுத்ததால் கண்ணீர் புகை குண்டுகளை போலீசார் வீசினார்.
போராட்டக்காரர்கள் அதற்கும் அசையாமல் இருக்கவே பின்னர் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். கடந்த இரு தினங்களில் மட்டும் போலீசாரின் துப்பாக்கிச்சூட்டிற்கு 33 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து அங்கு பதட்டமான நிலை காணப்படுகிறது.
பரவும் போராட்டம்
வன்முறை மூலம் தங்களை ஒடுக்க போலீஸாரும், ராணுவமும் முயல்வதாக போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். என்ன நடந்தாலும் போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை என்றும் மக்களாட்சி மீண்டும் மலரும் வரை போராடப் போவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் கூறியுள்ளனர்.
கெய்ரோ தவிர அலெக்சான்ட்ரியா, சூயஸ் உள்ளிட்ட நகரங்களிலும் கூட போராட்டம் வெடித்துள்ளதால் உயிர்பலி எண்ணிக்கை அதிகரிக்கக்
கூடும் என்று அஞ்சப்படுகிறது.












Click it and Unblock the Notifications