சும்மா நிற்கும் ரயிலை நெல்லை- மதுரை இடையே பகலில் இயக்க கோரிக்கை
நெல்லை: நெல்லையில் இருந்து மதுரைக்கு பகல் நேரத்தில் பயணிகள் ரயில் இயக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர். திருச்செந்தூரில் 5 மணி நேரம் சும்மா நிற்கும் பயணிகள் ரயிலை பயன்படுத்த ரயில்வே நிர்வாகம் முன் வரவேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
நெல்லையில் இருந்து மதுரைக்கு செல்பவர்களின் எண்ணிக்கை அதிகம். பேருந்து கட்டண உயர்விற்கு பிறகு ரயி்ல்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
நெல்லையில் இருந்து காலையில் குருவாயூர் எக்ஸ்பிரஸ், கோவை பயணிகள் ரயில், மயிலாடுதுறை பயணிகள் ரயில்களும், இரவில் நெல்லை எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், அனந்தபுரி எக்ஸ்பிரஸ், செந்தூர் எக்ஸ்பிரஸ், கோவை எக்ஸ்பிரஸ், கொல்லம்-மதுரை பயணிகள் ரயில் ஆகியவையும் இயக்கப்படுகின்றன.
நெல்லையில் இருந்து மதுரைக்கு செல்ல காலை 9.30 மணியில் இருந்து மாலை 4 மணி வரையிலும் ரயில் வசதியில்லை. இந்த இடைப்பட்ட நேரத்தில் மதுரைக்கு மக்கள் பேருந்தில் செல்ல வேண்டியுள்ளது. அரசு பேருந்துகளில் நெல்லை-மதுரைக்கு ரூ.98, ரூ.105 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் நடுத்தர மக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர்.
அதே நேரத்தில் நெல்லை-மதுரைக்கு பயணிகள் ரயிலில் செல்ல ரூ.23 தான் செலவாகும். இதனால் நெல்லை-மதுரைக்கு கூடுதலாக பயணிகள் ரயில் அதுவும் பகல் நேரத்தில் இயக்க வேண்டும் என மக்கள் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர்.